வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பம் மின்சாரமின்றி அவதி! அச்சத்தில் மின்சார சபை ஊழியர்கள்
வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பமொன்று கடந்த ஐந்து நாட்களாக மின்சாரம் இன்றி அவதியுற்று வருவதாகவும், திருத்தப்பணி செய்வதற்கு அவ்வீட்டிற்கு செல்வதற்கு மின்சார சபை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கிராம அமைப்புக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா- திருநாவற்குளம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சிலர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ,திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வரும் ஐந்து அங்கத்தவர்களைக்கொண்ட குடும்பம் ஒன்றின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வீட்டிற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதனைச்சீரமைத்து தருமாறு வடமாகாண மின்சார சபை மற்றும் வவுனியா மின்சார சபை அலுவலகங்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் அவ்வீட்டின் மின்மானி திருத்தப்பணிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி அங்கு திருத்தப்பணிகளுக்கு செல்வதற்கு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பம் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரம் இன்றி அவதியுற்று வருவதாகவும், தமக்கான மின்சார திருத்தப்பணிகளை உடன் மேற்கொண்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்குடும்பத்தினர் கிராம அமைப்புக்களிடம் கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.