தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா!

Tamils M. K. Stalin Tamil nadu Government Of India India
By Independent Writer May 24, 2025 11:45 AM GMT
Independent Writer

Independent Writer

in கட்டுரை
Report
Courtesy: ஐ.வி.மகாசேனன்

இந்தியாவின் தமிழ்நாடு தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும், தமிழினத்தின் தலைமையாகவும் தன்னை முன்னிலைப்படுத்தும் நிலப்பரப்பாகும்.

வரலாற்றில் சங்க காலம், சங்கமருவிய காலம் எனும் தமிழ் வரலாற்று கால வரிசையாயினும், சேரர் - சோழர் - பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சியாயினும் தமிழர் தம் வரலாற்றின் ஆதாரமாக தமிழ்நாடே குறிக்கப்படுகின்றது.

சமகாலத்திலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம், 'அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை' என்பதனை நிறுவி, அதன் செயற்பாட்டுகளூடாக உலகத் தமிழர்களின் தலைமையாக தம்மை சித்தரிக்க முயன்று வருகின்றார்கள்.

2025ஆம் ஆண்டு தமிழக அரசின் அயலகத் தமிழர் தின விழாவிலும் மு.க.ஸ்டாலின், 'நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம்! தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி! அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக. வருக... என்று வரவேற்கிறேன்!' என அழைத்திருந்தார்.

அயலகத் தமிழர் 

இதேவேளை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் ஈழத் தமிழ் அகதி ஒருவரின் வழக்கில், 'இந்தியா தர்ம சத்திரம் கிடையாது, வேறு நாட்டிற்கு செல்லலாம்' எனக்கூறி துரத்தியுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழகம் போதிய எதிர்வினையாற்றவில்லை என்ற கவலையை ஈழத்தமிழ் மக்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

இக்கட்டுரை ஈழத்தமிழ் அகதி தொடர்பிலான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினை தமிழ்நாடு அமைதியாக ஏற்றுக்கொண்டுள்ளமை வெளிப்படுத்தும் அரசியலை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! | Is Tamil Nadu Losing Its Culture Article

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் கனதியான வலியை சுமந்த மே மாதத்தில், தொப்புள் கொடி உறவாக நினைத்துக் கொண்டுள்ள தமிழகமும், 2025ஆம் ஆண்டு பெருவலியை கொடுத்துள்ளது. ஈழத்தமிழர் ஒருவர் 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு அவரது சிறைத் தண்டனையை 7ஆண்டுகளாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறைத் தண்டனை முடிந்ததும், அவர் இலங்கைக்கு நாடுகடத்தவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் கூறியுள்ள அவர், தன்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கனவே நாங்கள் 140 கோடி மக்களுடன் இருந்து போராடி வாழ்ந்து வருகிறோம்.

நீதிமன்றின் உத்தரவு 

இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்' எனக்கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இத்தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சொல்லாடல்கள் ஈழத்தமிழர்களை வெகுவாக பாதிக்கச்செய்துள்ளது.

ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைமைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் பின்னால் தமிழக - ஈழத்தமிழர் புவியியல் தொடர்பு கணிசமான தாக்கத்தை செலுத்துகின்றது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் பின்புலம், தமிழகத்தை ஈழத்தமிழருடன் பின்னிப் பிணைந்த புவியியல் - பண்பாட்டு - வரலாற்றுப் பின்னணியில் வைத்து யதார்த்த நிலமைகளுக்கு ஊடாக அணுக வேண்டிய அவசியத்தை அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! | Is Tamil Nadu Losing Its Culture Article

அதாவது, மனிதனது அரசியல் வாழ்வானது அவன் சார்ந்த சூழ்நிலைகளினால் மற்றும் பின்னணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது தெளிவானது. அப்படிப் பார்க்கையில் புவியியல் அமைவிடம் சார்ந்த தர்க்கரீதியான யதார்த்தபூர்வ நிலமைகளின் படி தமிழகம்தான் ஈழத் தமிழர்களின் குருவிக்கூடு. அதேவேளை ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான் இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் (Corner Stone) என்பதனையும் கருத்திற்கொள்ளத் தவறமுடியாது.

நவீன வரலாற்றிலும் இலங்கையின் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்திலும், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் ஈழத்தமிழர்களின் தமிழகம் தொடர்பான எதிர்பார்க்கையும் அதனையே உறுதி செய்கின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால இயக்கங்களுக்கு தமிழகமே பாதுகாப்பு அளித்தது. அனைத்து இயக்கங்களது தலைவர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்தனர். தமிழகத்திலிருந்து வெளியே வந்து இலங்கையில் அழிக்கப்பட்டனர்.

போராட்ட இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்றி, தமிழகத்தை ஒரு குருவிக்கூடாகக் கொண்டிருந்த காலத்திற்தான் விடுதலைப் போராட்டம் வளர்ந்து சென்றது. தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அந்நியப்பட்டபோது விடுதலைப் போராட்டம் எதிர்நிலையைக் கொண்டது. குறிப்பாக 1987இற்கு பின்னர் தமிழக-ஈழத்தமிழர் உறவில் விரிசல் அடையாளம் காணப்படுகின்றது. அதன் விளைவே 2009இல் ஆயுதப்போராட்டத்தின் தோல்வியாகும்.

ஒத்த இனசகோதரத்துவம் (Ethnic Brotherhood) சர்வதேச அரசியலில் நிர்ணயகரமான சக்திகளில் ஒன்றாகும். குறிப்பாக நாடுகடந்த இஸ்லாமிய சகோதரத்துவ அரசியலிலும், கனடாவின் கியூபெக் பிரஞ்சின சகோதரத்துவ அரசியலிலும் நாடுகடந்த சகோதரத்துவ அரசியல்களின் வெற்றிகளைக் காணலாம். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும் தமிழகம் கனதியான வகிபாகத்தை வகித்துள்ளது.

சீமான் கட்சி 

ஈழத்தமிழர்களின் விடுதலையை மையப்படுத்தி 1995ஆம் ஆண்டில் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார். இந்த வரிசையில் தாயகத்துக்கு வெளியே தமிழகத்தில் 15 பேர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உயிரை மாய்த்துள்ளனர். இவ்உறவுநிலை மேன்மையானது மற்றும் ஈழத்தமிழ் மற்றும் தமிழக உறவின் வலிமையை பறைசாற்றுகின்றது.

சமகாலத்திலும் அரசியலுக்கு அப்பால் தமிழக மக்களிடையே ஈழத்தமிழர் சார்ந்த எண்ணங்கள் வலிமையானதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக சமகாலத்தில் சமுகவலைத்தளங்களில் பரவலாக ஒரு காணொளி பகிரப்படுகின்றது. அக்காணொளியில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர், தமது நிலத்துக்கு வெளியே உள்ள ஈழத்தில் பிறந்து வளர்ந்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் தமிழினத்தின் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம் எனக்கூறியிருந்தார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! | Is Tamil Nadu Losing Its Culture Article

இன்று தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அப்பால் ஏனைய அரசியல் கட்சிகள் பெருமளவில் ஈழத்தமிழர் அரசியலை குறிப்பாக விடுதலைப் போராட்ட வரலாற்றை பாதுகாப்பதில்லை.

எனினும் ஏனைய கட்சிகளின் தொண்டர்களால் வைக்கப்படும் பனர்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படங்களை தமிழக தெருக்களில் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் தமிழக மக்களிடையே ஈழத்தமிழர் சார்ந்த அன்பு தொடர்வதனை அவதானிக்கலாம்.

இருப்பினும் இதனை வினைத்திறனாக ஒருங்குசேர்த்து ஈழத்தமிழர்களின் ஆதரவை திரட்டக்கூடிய அரசியல் தலைமைகள் தமிழகத்தில் வெற்றிடமாக காணப்படுகின்றது. அதே தவறு ஈழத்தமிழரசியல் தலைமைகளிடமும் காணப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தில், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பௌத்த, பார்சி, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஆவணமற்ற மக்களுக்கு குடியுரிமை வழங்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் சிறுபான்iமை இந்து மத சமுகங்கள் ஒடுக்கப்படுவதனையே குறிக்கின்றது.

இந்தப்பின்னணியிலேயே இலங்கையும் அரசியலமைப்பு ரீதியாகவே பௌத்த பெரும்பான்மை நாடு ஆகும். அதேவேளை சிறுபான்மை தேசிய இனமான ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இந்தியா அயல்நாடு என்ற அடிப்படையிலும், தமிழகம் மொழியாலும் பண்பாட்டாலும் ஒத்த இனம் என்ற அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தில் தஞ்சம் கொள்கின்றனர்.

அரசியலமைப்பு ரீதியாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து மதக்குடும்ப மக்களை ஏற்றுக்கொள்ளும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களை வேறு நாட்டுக்கு செல்லுமாறு நிந்திப்பதை ஒத்த சகோதர இனத்துவமான தமிழகம் அமைதியாக ஏற்றுக்கொள்கின்றது. இது தமிழக அரசியல் தலைமைகளின் தமிழர்கள் மீதான அக்கறையின்மைமையையே உணர்த்துகின்றது.

தமிழக - ஈழத்தமிழர் உறவு

சமகாலத்தில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழலில் வங்காள இந்து மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அரசியல் தலைவர்களும் மக்களும் ஒன்று திரண்டார்கள். அத்தகையதொரு கூட்டு ஆதரவை ஈழத்தமிழர்களுக்கு திரட்டக்கூடிய அரசியல் திராணியை தமிழக தலைவர்கள் வெளிப்படுத்த தவறியுள்ளார்கள்.

இதுவொரு வகையில் தமிழக-ஈழத்தமிழர் உறவை பலவீனப்படுத்துவதில் தமிழக அரசியல் தலைவர்களின் விருப்பையும் அடையாளப்படுத்துகின்றது. ஈழத்தமிழ் அகதிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் தமிழக அரசியல் மட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஊடக சந்திப்பில் கருத்துரைத்திருந்தார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! | Is Tamil Nadu Losing Its Culture Article

'இலங்கை தமிழர் ஒருவர் கொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் தற்போது, பிறநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இடம் கொடுக்க இந்திய சத்திரம் அல்ல என்று சொல்லியிருப்பது, மனிதாபிமானத்திற்கு புறம்பாக இருக்கிறது.' எனக்குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 'உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளவு கடந்த வேதனையை அளிக்கிறது.

புத்தரும், மகாவீரரும், காந்தியும் பிறந்த இந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது. சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது, அங்கிருந்து தப்பி தலாய்லாமா தனது மக்களுடன் நடந்தே இந்தியாவின் எல்லைக்கு வந்த போது, அப்போதைய பிரதமர் நேரு இந்திய எல்லைக்கே சென்று அவரையும், வரவேற்று இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தார்.

கடந்த 63 ஆண்டுகளாக தலாய்லாமாவும், திபெத்திய அகதிகளும் இந்தியாவில் உள்ளனர்' எனத்தெரிவித்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அறிக்கை அரசியல் செய்துள்ளனர். ஊடக சந்திப்பில் கருத்துப்பகிர்வும், அறிக்கை அரசியலுமே தமிழக அரசியல் தரப்பில் உயர்ந்தபட்ச எதிர்வினையாக உள்ளது. குறைந்தபட்சம் தமிழக மக்களிடையே ஈழத்தமிழ் அகதி புறமொதுக்கப்படுவதை செய்தியாக கொண்டு சேர்த்து, தமிழக மக்களிடையே பொது எதிர்ப்பை உருவாக்குவதைக் கூட தமிழக அரசியல் தலைமைகள் செய்யத் தயாராகவில்லை.

ஈழத்தமிழர்களை மலினமாக கையாளும் நடவடிக்கையினை சென்னை உயர் நீதிமன்றம் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தின் அரசு இயந்திரங்கள் யாவும் ஒரே எண்ணப்பாங்கிலேயே பெருமளவு இயங்குகின்றது. குறிப்பாக தமிழகத்தின் சாஸ்திரி பவனுக்கு ஈழத்தமிழர்கள் தமது இந்திய அரசிடமிருந்தான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்கின்ற போது, அங்குள்ள உத்தியோகத்தர்கள் ஈழத்தமிழர்களை உதாசீனம் செய்யும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் உரையாடுகையில் மரியாதை கொடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது என்பதனை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அவ்வாறே சென்னை விமான நிலையத்தில் ஈழத்தமிழர்களை தரக்குறைவாக நோக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் பொதிகளை கிளறுவது தாமதப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்வாக அமைகின்றது. இங்கே தமிழகத்தின் சாஸ்திரி பவனிலும் மற்றும் சென்னை விமான நிலையத்திலும் தமிழையே புறமொதுக்குகின்றனர்.

இதனை எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் கேள்வி கேட்க தயாரில்லை. எனினும் தம்மை தமிழினத்தின் தலைவர்களாக சித்தரிக்க போட்டியிடுகின்றார்கள். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் அறிவிப்பு தமிழகம் தமிழரின் தாய் நிலமாக சித்தரித்துவரும் வடிவத்தை சிதைப்பதாகவே காணப்படுகின்றது. இதனை தமிழக அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்வது தமிழை தமிழக எல்லைக்குள் சுருக்கும் அவர்களது குறுகிய நலன்களையே உணர்த்துகின்றது.

மேலும் தமிழக அரசின் அயலக தமிழர் தினம் போன்ற நிகழ்வுகளும் அங்கு நிகழும் உரையாடல்களும் வெறுமனவே போலிகளால் நிறைந்தவை என்பதையே உறுதி செய்கின்றது. 2025ஆம் ஆண்டு அயலக தமிழர் தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்திருக்கும் உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டு ஒன்று நினைவிற்கு வருகிறது.

'எங்கும் பாரடா இப்புவி மக்களை - பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்! 'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்' என்று பாவேந்தர் பாடினார்.

அப்படிப்பட்ட மகிழ்ச்சிதான் இப்போது என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது!' எனத் தனது உரையை ஆரம்பித்தார். எனினும் நீதிமன்றம் தன்குலத்தை அவமானம் செய்து, வெளியேற நிர்ப்பந்தித்துள்ளதை கண்டு சினங்கொள்ளாதது, தமிழக அரசின் போலித் தன்மையையே கேள்விக்குட்படுத்துகிறது. இதிலிருந்து ஈழத்தமிழர்களும் விழித்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 24 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US