ஆறடி அறையில் மூச்செடுக்க கூட வழியில்லாமல் போராடும் சுரேஷ் சலே..! மருத்துவ அறிக்கையில் கிடைத்த ஆதாரம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்புக்காவலில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது உண்மை என்று மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் சலே சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் சாலே துன்புறுத்தப்படுகிறாரா?
குறித்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவரது சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, தடுப்புக் காவலில் உள்ள மனுதாரர் சுரேஷ் சலேவைப் பரிசோதித்த சட்ட மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை ஒரு மனுவின் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கொழும்பின் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஸ்ரீயந்த அமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு மருத்துவ குழுவினால் சுரேஷ் சலே பரிசோதிக்கப்பட்டு, அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அறிக்கையின்படி, மனுதாரர் சித்திரவதைக்கும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ குற்றம் சாட்டினார்.
இதன்படி, இந்த நபர் ஆறடி நான்கு அங்குல அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் முறையான காற்றோட்டம் இல்லை. சூரிய ஒளி இல்லை. குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க வாய்ப்பு இல்லை.
அவர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளார் என்றும் அதன் விளைவாக, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறார் என்று மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
ஆசாத் மௌலானா உடனான விசாரணைக்கு நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மனுதாரர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அகதியாக வெளிநாட்டில் இருக்கும் ஆசாத் மௌலானா, பிரிட்டனில் உள்ள சேனல் 4 க்கு அளித்த பேட்டியின் அடிப்படையில் இந்த விசாரணையைத் தொடங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிட்டார்.
அவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரை, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் குழு ஒன்று பிரான்சுக்குச் சென்று, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவரை இலங்கைத் தூதரகத்திற்கு வரவழைப்பது சட்டரீதியாக தவறானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி ஜயவர்த்தன, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அந்த நபரைக் கைது செய்து நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதன்பிறகு நீதிமன்றம், மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri