ஈரான் போரால் சூடான் அகதிகளுக்கான உதவிச் செலவு இரண்டு மடங்கு உயர்வு: ஐ.நா எச்சரிக்கை
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலித் தடங்கல்களால், சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளுக்கான செலவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கிய கடல் வழித்தடங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால், துபாயிலிருந்து சூடான் மற்றும் சாட் நாடுகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு 9.2 லட்சம் டொலரிலிருந்து 18.7 லட்சம் டொலராக உயர்ந்துள்ளது.
முன்னதாக துபாய் வழியாகச் சென்ற கப்பல்கள், தற்போது ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாகச் சுற்றி வருவதால், உதவிப் பொருட்கள் சென்றடைவதில் 25 நாட்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு
கடல் வழிப் போக்குவரத்து மட்டுமின்றி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் காப்பீட்டுக் கட்டண அதிகரிப்பு ஆகியவையும் நிவாரணப் பணிகளை முடக்கியுள்ளன.

குறிப்பாக நைரோபியில் எரிபொருள் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கு தரைவழியாகப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகளின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, தனது 8.5 பில்லியன் டொலர் நிதி உதவி கோரிக்கையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு கூடுதல் டொலரும் களத்தில் உள்ள அகதிகளுக்குச் சேர வேண்டிய உதவியைக் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளது.
ஐ.நா கோரிக்கை
இந்த விநியோகத் தடைகள் உலகின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியைச் சந்தித்து வரும் சூடான் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்துள்ளது.

உணவு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், அகதி முகாம்களில் உள்ள மக்கள் கடுமையான பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகள் உடனடி நிதி உதவி மற்றும் விநியோகப் பாதைகளைச் சீரமைக்க முன்வர வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.