ஈரான் போருக்கான செலவு - இதுவே முதல் முறை! பென்டகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதற்காக இதுவரை சுமார் 25 பில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பென்டகன் அதிகாரி ஜூல்ஸ் ஹர்ஸ்ட், இந்தச் செலவில் பெரும்பகுதி ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே முதல் முறை
அமெரிக்க வரலாற்றில் ஒரு குறுகிய காலப் போருக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த 25 பில்லியன் டொலர் என்பது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டிற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தச் செலவை நியாயப்படுத்திப் பேசுகையில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுப்பதே தங்களது முக்கிய நோக்கம் என்றும், அதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தப் போரால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே இந்தப் போருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்காலிகப் போர்நிறுத்தம்
13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தது போன்ற சம்பவங்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
போரினால் சேதமடைந்த மத்திய கிழக்கு நாடுகளின் இராணுவக் கட்டமைப்புகளைச் சீரமைக்க இன்னும் கூடுதல் நிதி தேவைப்படும் என்றும், இது அமெரிக்காவின் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலில், போரைத் தொடர்வதா அல்லது தூதரக ரீதியாகத் தீர்வு காண்பதா என்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam