ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை பாகங்களை அனுப்பிய ஈரான்
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவ, ஈரான் தன் நாட்டின் 'இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை' தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை-டிரோன் பாகங்களை இரகசிய விமானம் மூலம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 13 அன்று ஈரானின் 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தெஹ்ரானில் இருந்து ஏமன் நோக்கிக் கிளம்பியது.
இதில் 10 முதல் 21 வரையிலான ஐ.ஆர்.ஜி.சி இராணுவத் தளபதிகள், நிபுணர்கள் மற்றும் குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் படைகள் தாக்குதல்
முதலில் ஏமன் தலைநகர் சனாவுக்குச் செல்லவிருந்த இந்த விமானம், சனா விமான நிலையத்தின் மீது சவூதி ஆதரவு ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதால், ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹோடைடாவிற்கு திருப்பி விடப்பட்டது.
ஹூதிகளின் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விமானத்தில் தங்கமும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தளபதிகள் ஏமன் வந்தடைந்த சில நாட்களில், செங்கடல் பகுதியில் சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடல்சார் முற்றுகையை ஹூதி அமைப்பு அறிவித்தது.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
மேலும், வியாழக்கிழமை அன்று சவூதியின் இரு மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அறிவித்துள்ளனர்.
ஏமன் தகவல் தொடர்பு அமைச்சர் முஅம்மர் அல்-இர்யானி கருத்து: "ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பலத்தைப் பெருக்கவும், செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் ஜலசந்தியில் சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவுமே ஈரானியத் தளபதிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

" ஈரான் வழக்கம்போல் ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இருப்பினும், இந்த புதிய நடவடிக்கை சவூதி அரேபியா மற்றும் ஹூதி அமைப்பினரிடையே நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த அமைதியை சீர்குலைத்து, உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.