ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா
மத்திய கிழக்கில் ஈரான் மீது 2026 பெப்ரவரி 28 ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து காவிய கோப நடவடிக்கை என்ற பெயர் சூட்டி பேரரசவாத திமிர்கொண்ட இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி முதல் 24 மணி நேரத்தில் 1,000 மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன.
தெஹ்ரானில் உள்ள உச்ச தலைமைப் பகுதிகள் மற்றும் அதிபர் மாளிகை, மினாப் பெண்கள் பள்ளி (168 குழந்தைகள் உயிரிழப்பு) மற்றும் லாமர்ட் விளையாட்டு அரங்கம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
தாக்குதல்கள் மூலம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணுத் திட்டங்களை முடக்குதல், ஈரானிய கடற்படைப் படையை அழித்தல், ஈரானின் தலைமையை அழித்தல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துதல் என பல நோக்கங்களைக் கொண்ட தொடர் தாக்குதல்கள் 54 நாட்களைக் கடந்த நிலையிலும் ஈரானை அடிபணிய வைக்க முடியவில்லை.
ஹோர்மூஸ் நீரிணை
இவற்றின் ஒட்டுமொத்த விளைவால் உலகிற்கான 20% எண்ணை வழங்களைச் செய்யும் ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்து தடைபட்டுவிட்டது. இப்போது மாற்று வழிபற்றி அமெரிக்கத் தரப்பு பேசத் தொடங்கிவிட்டது. எனவே இந்தப் போரில் யாரும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அமெரிக்காவின் தொடர் வான்வழி தாக்குதலை அடுத்து ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உடனடியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்களினால் வளகுடாவிற்கான கடல் போக்குவரத்தின் ஒரே வழியான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டாலும் ஈரான் மீது தாக்கல் நடத்தும் அமெரிக்க-இஸ்ரேலுக்கும் அவற்றின் துணை நாடுகளுக்கு மட்டுமே நீரினை மூடப்பட்டு இருக்கிறது என்றும், ஏனைய நாடுகளுக்கு திறந்திருக்கிறது என்றும் ஈரான் அறிவித்து சர்வதேச நாடுகளின் வரவேற்பை பெற்றுக் கொண்டது.
இங்கே ஈரானை ஜெனரல் ஹோர்மூஸ் என்ற இயற்கை அமைவிட தளபதி எப்போதும் பாதுகாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் உலகளாவிய என்னை ஏற்றுமதி தடைப்பட்டதனால் அதன் விலை பன்மடங்கு அதிகரித்து உலகப் பொருளாதாரத்தின் மீதும் பெரும் தாக்கத்தை செலுத்த உலகளாவிய அழுத்தம் அமெரிக்கா மீது சாயத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில்தான் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அமெரிக்காவால் ஈரானை தனது வழிக்கு கொண்டு வர முடியாத சூழலில் பாகிஸ்தானின் ஏற்பாட்டில் 2026 ஏப்ரல் 11ஆம், 12ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எந்த முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சு வார்த்தை பயனளிக்காத நிலையில் ஈரான் மீதான அமெரிக்கவின் கடல்வழி முற்றுகை ஏப்ரல் 13 காலை 10:00 மணிக்கு நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 18-04-2026ல் ஈரானும் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பானது அவர்கள் ஏப்ரல் 17இல் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுக்கான முக்கிய காரணம் 13-04-2026இல் இருந்துஅமலுக்கு வந்த அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை (Naval Blockade) தொடர்வதனால் தமது பாதுகாப்பை முன்னிட்டு இந்த முடிவை தாம் எடுப்பதாக ஈரான் அறிவித்து சர்வதேச அரசுகளின் அபிப்பிராயத்தை தன் பக்கம் திருப்பியதோடு தனது ராஜதந்திர பந்தை அமெரிக்கா பக்கம் அடித்து விட்டுவிட்டது.
ஈரானின் இந்த அறிவிப்பின் மூலம் "அமெரிக்க முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்" என ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க முற்றுகை நீடிக்கும் வரை, போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும் கூட நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் கூறியிருப்பது ஈரானியர்களின் ராஜதந்திர முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஹோர்மூஸ் நீரிணையை போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருக்கும் நிலையில் தற்போது வளைகுடாக் கடல் நாடுகளான ஈராக் குவைத் பஹ்ரைன் கட்டார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிக்கான புதிய ஒரு தரைவழிப் பாதையாக ஈராக்- சிரியா ஊடான தரைவழி பாதை ஒன்றை பற்றி அமெரிக்கா ஊடகங்கள் கூறுகின்றன.
எரிபொருள் சேமிப்பு
அந்த வழித்தடம் பற்றியும் சற்று நோக்குவோம். அந்த வழித்தடம் ஈராக்கின் அல்-காயிம் நகரையும் சிரியாவின் அல்-புகமல் நகரையும் இணைக்கும் முக்கிய தரைவழிப்பாதை. சிரியாவின் எல்லையை கடந்த பின்னர் டெய்ர் எஸ்-ஸோர்(Deir ez-Zor) நகருக்கூடாக பாதை செல்கிறது.
டெய்ர் எஸ்-ஸோர் என்பது கிழக்கு சிரியாவின் மிகப்பெரிய நகரமாகும், இது யூப்ரடீஸ் நதிக்கரையில் டமாஸ்கஸிலிருந்து வடகிழக்கே 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அதனையடுத்து ஹோம்ஸ்(Homs)அல்லது அம்முஸ் சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கசுக்கு வடக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரத்தினூடாக மேற்குத் திசை நோக்கி சென்றுதான் மத்தியதரைக் கடலிலுள்ள துறைமுகங்களை அடைய முடியும்.

இதுவே சிரியாவின் கிழக்கு–மேற்கு நெடுஞ்சாலை இணைப்பின் முக்கிய அச்சு. இந்த நெடுஞ்சாலை ஊடாக மத்தியதரைக்கடலில் உள்ள சிரியாவின் மூன்று முக்கிய துறைமுக நகரங்களுக்கு செல்லமுடியும். எண்ணெய் வர்த்தகத்தின் நோக்கிநிலையில் Tartus, Latakia, Baniyas ஆகிய மூன்று துறைமுகங்களும் மிக முக்கியமானவை.
முதலாவது டார்டஸ்(Tartus) சிரியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்த இரண்டாவது பெரிய துறைமுகம் இது எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்பு, ஏற்றுமதி மையம். ஆயினும் இங்கு ரஸ்சியாவின்(Russia) கடற்படை தளம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் Tartus ஒரு புவிசார் அரசியல் கொதிநிலையப் பகுதி(geopolitical hotspot) ஆகவும் கருதப்படுகிறது.
இரண்டாவது லற்றகிய(Latakia) துறைமுகநகரம். இது Tartusக்கு வடக்கில், மத்தியதரைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இதுவே சிரியாவின் முக்கிய மற்றும் மிகப் பெரிய துறைமுகம் இறக்குமதி–ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் சிரியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்று.
இத்தகைய நெடுஞ்சாலை வழியாக இறுதியில் சிரிய துறைமுகங்களில் கப்பல்களில் ஏற்றி சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும். இது கடல் வழி சுற்றுப்பாதையை விட குறைந்த தூரத்தில் ஐரோப்பா சந்தைகளுக்கு செல்ல முடியும்.
மூன்றாவதாக பனியாஸ்(Baniyas) எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்றுமதி, சுத்திகரிப்பு மையமாகவே இத்தறைமுகம் வடிவமைக்கப்பட்டது.
மற்றும் இதன் அருகில் பெரிய refinery உள்ளதோடு Kirkuk–Baniyas pipeline இணைப்பு இருக்கின்றமையால் கச்சா எண்ணெய் கையாளுதலுக்கு ஏற்ற வசதிகள், சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு ஒரே இடத்தில், ஆற்றல் மையக இயங்கும் திறன் போன்ற நன்மைகள் உண்டு. ஆனால் நடைமுறையில் இந்த நெடுஞ்சாலை போக்குவரத்து பாதை பேச்சுக்சுக்கும், வரைபடத்திலும் எளிதாக தோன்றினாலும் உண்மையில் மிக்க்கடினமான சவால்கள் நிறையவே இருக்கின்றது.
Syrian Civil War காரணமாக பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இங்கு பாதுகாப்பு இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை, சாலை மற்றும் கட்டமைப்பு (infrastructure) மீளமைப்பு உடனடியாக செய்யப்பட வேண்டி உள்ளது.
வர்த்தக உறவுகள்
இந்த நுழைவாயில்(corridor) இயங்கத் தொடங்கினால் ஈராக்கிற்கு நேரடியாக மத்தியதரைக்கடலுடன் இணைக்கப்பட்ட ஒரு பாதை கிடைத்துவிடும். இதன்மூலம் போக்குவரத்து செலவு குறைவு, பிராந்திய அரசியல், மற்றும் வர்த்தக உறவுகள் வலுவாகும். இது அரபிய நாடுகளுக்கு பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
ஆனால் அமெரிக்க வல்லாதிக்க சிந்தனைக்கு இது யானை பசிக்கு சோளம் பொரியாகவே அமையும். இந்த தரைவழி எண்ணெய் வர்த்தக வழித்தடத்தைவிட இன்னும் ஒரு தெரிவும் இங்கு உள்ளது. அது என்னவெனில் ஏற்கனவே ஈராக்கினால் பயன்படுத்தப்பட்ட தற்போது கைவிடப்பட்டிருக்கின்ற "கிர்குக்-பனியாஸ் எண்ணெய் குழாய் திட்டம்.

பழமையான, தற்போது செயல்படாத எண்ணெய் குழாய்வழி ஈராக்கின் கிர்குக் முதல் சிரியாவின் பனியாஸ் துறைமுகம்வரை செல்லும் தோராயமாக 800-850 கி.மீ நீளமான இந்தக் குழாய்த் திட்டம் 1952ல் ஈராக் பெட்ரோலியம் நிறுவனத்தால் (IPC) கட்டி முடிக்கப்பட்டது.
இதன்மூலம் நாள் ஒன்றிற்கு 3,00,000 பீப்பாய்கள் கொண்டுசெல்ல முடியும். இது 1982 முதல் பெரும்பாலும் செயல்படவில்லை. 2003ல் ஈராக் போரின் போது கடுமையாக சேதமடைந்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.பழைய குழாயை சீரமைப்பதற்குப் பதிலாக புதிய குழாய் ஒன்றை அமைக்க ஈராக் திட்டமிட்டுள்ளது.
அதற்கான செலவு சுமார் 8 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான பழைய திட்டம் 2003க்கு பின் முற்றிலும் செயலிழந்தது. சிரிய சிவில் யுத்தத்தினால் கட்டமைப்பு சேதம், அரசியல் நம்பிக்கையின்மை (Iraq–Syria), பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாகவே கைவிடப்பட்டிருக்கிறது.
ஆயினும் இத்திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலை போக்குவரத்தைவிட மலிவானதும், அதிக அளவு எண்ணெய் ஒரே நேரத்தில் அனுப்பி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு இலகுவான போக்குவரத்தாகவும் அமையும். ஆனால் இவை உடனடியாக பயனளிக்காது.
மறுசீரமைக்க நீண்டகாலம் தேவைப்படும். இப்போதைய நிலையில் Hormuz க்கு சொல்லுகின்ற வழியை ஏமன் வளைகுடாக் கடலில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி தடுப்பதன் மூலம் ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகைற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இத்தகைய பின்னணியில் ஈரானுக்கு இருக்கக்கூடிய கடலோர துறைமுகங்களை நோக்குவோம். ஓமன் வளைகுடா (Gulf of Oman) கடற்கரையில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து மேற்கே Hormuz Strait வரை உள்ள ஈரானின் துறைமுகங்களாக பாசபந்தர்(Pasabandar), பெரிஸ்(Beris), Chabah(சாபஹார்) திஸ்(Tis), கோனராக்(Konarak), தாங்(Tang), ஜாஸ்க்(Jask) ஆகியவை உள்ளன.
இவற்றில் Chabahar Port ஈரானின் முக்கிய இந்து சமுத்திர துறைமுகமாகும். இதன் Shahid Beheshti & Shahid Kalantari முனையங்கள் மத்திய ஆசியாவுக்கான முக்கிய வர்த்தக நுழைவாயில். Tis Port இது Chabaharக்கு அருகில் பழமையான சிறிய கடல்சார் துறைமுகம் Konarak Port ஈரானிய கடற்படை தளம் அமைந்துள்ளது.
Jask Port (ஜாஸ்க்) துறைமுகமானது இந்தப் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவமான துறைமுகம் இது Hormuz நீரிணைக்கு அருகில் எண்ணெய் மற்றும் இராணுவ பயன்பாட்டுக்கு பெரிதும் பயன்படுகிறது என்ற அடிப்படையில் ஈரானின் இந்து சமுத்திரத் துறைமுகங்களில் மிக முக்கியமானது.
இத்துறைமுகங்கள் அனைத்தும் ஈரான் தென்கிழக்கு கடற்கரையில் உள்ளவை என்பதனால் தற்போதைய அமெரிக்க கடற்படையின் நேரடி முற்றுகைக்கு உட்பட்ட துறைமுகங்களாக உள்ளன.
அமெரிக்க கடற்படை
அதே நேரத்தில் இந்த சமுத்திரன் ஒரு பகுதியான கோர்மோஸ் நீர் இணை ஊடாக மட்டுமே பயணிக்கக்கூடிய பாரசீக வளைகுடா கடற் பகுதியில் ஈரானுக்கு உள்ள துறைமுகங்களான பந்தர் லெங்கே (Bandar Lengeh), பந்தர் கமிர் (Bandar Khamir), பந்தர் சரக் (Bandar Charak), பந்தர் தையர் (Bandar Dayyer), கார்க் தீவு (Kharg Island) பூஷெஹர் (Bushehr). பந்தர் கனாவே (Bandar Ganaveh), பந்தர்-ஈ-டேலாம் (Bandar-e Deylam), மஹ்ஷஹர் (Mahshahr), பந்தர் இமாம் கொமெய்னி (Bandar Imam Khomeini), அபாதான் (Abadan), கிஷ் தீவு (Kish Island), கெஷ்ம் தீவு (Qeshm Island) ஆகிய துறைமுகங்கள் முக்கியமானவை.
ஆயினும் இத்துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை நேரடியாக தாக்குதல் நடத்தவோ, முடக்கவோ முடியாது. ஆனால் துறைமுகங்களில் இருந்து இந்து சமுத்திரத்திற்கான வழித்தடத்தில் ஏமன் வளைகுடாவில் முற்றுகையிடுவதன் மூலம் இத்துறைமுகங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும் இத்துறை முகங்கள் முடக்கப்பட்டாலும் ஈரானுக்கான மாற்றுக் கடல் வழிப் பாதையாக “கஸ்பியன் கடலும் வோல்கா–டன் கால்வாய்“(Volga–Don Canal) வழிப்பாதை உள்ளது என்பதே இங்கே முக்கிய விடயமாகும். கஸ்பியன் கடல் (Caspian Sea) உலகிலேயே மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலையாகும்.
இது ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே அமைந்துள்ளது. கஸ்பியன் கடலைச் சுற்றி உள்ள 5 எல்லை நாடுகள் ரஷ்யா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், அஜர்பைஜான் ஆகியவை உள்ளன.
இது சுமார் 371,000 சதுர கி.மீ பரப்பளவையும், சுமார் 1,025 மீட்டர் ஆழத்தையும் கொண்டது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் இக்கடற்பரப்பில் உள்ளன. ஐரோப்பாவின் மிக நீளமான வோல்காநதி(Volga River) கஸ்பியன் கடலுக்குள் கலக்கிறது.
டன் நதி (Don River) ரஷ்யாவின் முக்கியமான நதி இது சுமார் 1,870 கி.மீ நீளம் வரை பாய்ந்து அசோவ் கடலில்(Sea of Azov) கலக்கிறது. வோல்கா நதியையும், டன் நதியையும் இணைத்து 1948 – 1952 வரையான காலத்தில் சோவியட்யூனினால் சுமார் 101 கி.மீ நீளமான வோல்கா–டன் கால்வாய்(Volga–Don Canal) என்னும் ஒரு செயற்கை கால்வாய் கட்டப்பட்டது.
இதன் மூலம் கஸ்பியன்கடல் → வோல்காநதி → டொன்நதி → அசோவ் கடல் → கருங்கடல் → மத்தியதரைக் கடல் வழியாக இந்துசமுத்திரத்திற்கோ அத்திலாந்திக் சமுத்திரத்தையோ அடைய முடியும். இது உள்நாட்டு கஸ்பியன்கடலை சமுத்திரங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையாகும்.
நவீன துறைமுகம்
கஸ்பியன் கடலிலிருந்து கருங்கடல் வரை நீர்வழி கப்பல் போக்குவரத்தை இணைப்புக்கு 13 கப்பல் உயரம் மாற்ற அமைப்புகள்(Lock systems) உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து கஸ்பியன் வழியாக Volga–Don Canal மூலம் கருங்கடல் நோக்கி செல்லும் கப்பல்களுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய ஈரானிய துறைமுகங்கள் பற்றிப் பார்ப்போம்.

1) பண்டர் அன்சாலி துறைமுகம்(Bandar Anzali Port) ஈரானின் Gilan மாகாணத்தின் வடக்கில் கஸ்பியன் கடலிலுள்ள மிகப்பெரியதும், பழமையானதுமான துறைமுகம். ரஷ்யா மற்றும் காஸ்பியன் நாடுகளுடன் முக்கிய வர்த்தக மையம். பொதுப் பொருட்கள், கெண்டெய்னர்கள், எண்ணெய் பொருட்கள் என்பன வோல்கா-டன் கால்வாய் வழி கருங்கடலிக்குச் செல்லும் கப்பல்களின் தொடக்கத் துறைமுகமாகும்.
2) அமிராபாத் துறைமுகம்(Amirabad Port) ஈரானின் Mazandaran மாகாணத்திலுள்ள பெரிய துறைமுகம். வோல்கா-டன் கால்வாய்வழி கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான நவீன துறைமுகம். ரயில் இணைப்பு ஊடாக உள்நாட்டு போக்குவரத்திற்கும் கொள்கலன் மற்றும் தானியம், இரும்பு, நிலக்கரி போன்ற பொருட்கள் இதனூடாக ஈரனுக்கு வழங்குகிறது.
3) நவ்ஷாஹர் துறைமுகம்(Nowshahr Port0 ஈரானின் Mazandaran மாகாணத்தில் கஸ்பியன் கடல் வர்த்தகத்தில் நடுத்தர அளவிலான துறைமுகம். கொள்கலன் மற்றும் பொதுச் சரக்குப்பொதி ஏற்றியிறக்கும் துறைமுகம்.
4) ஃபெரெய்டன்கெனர் துறைமுகம்(Fereydunkenar Port) ஈரானின் Mazandaran மாகாணத்திலுள்ள சிறிய அளவிலான துறைமுகம்தான். மீன்பிடி மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு அதிகம் பயன்பாடு துறைமுகம் சில நேரங்களில் சிறிய சரக்கு கப்பல்கள் வந்து போகின்றன.
5) அஸ்டாரா துறைமுகம்(Astara Port) ஈரானின் அசர்ப்பைஜானுக்கு அருகில் எல்லை நாடுகளுடனான வர்த்தகத்திற்கு முக்கியமானது துறைமுகம். இதற்கு ரயில் மற்றும் நெடுஞ்சாலை இணைப்புகள் மூலமாக வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தில் (INSTC) இத்துறைமுகம் முக்கியபங்கு வகிக்கிறது.
6) காஸ்பியன் துறைமுகம்(Caspian Port) இது Gilan மாகாணத்தில், அன்சாலி தொழில்துறை சுதந்திர வர்த்தக வலய (Anzali Trade-Industrial Freezone) பகுதியில் அமைந்துள்ளது. கஸ்பியன் வழித்தடத்தின் முக்கிய முனையாமாகவுள்ளமை குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய ஈரானுக்குரித்தான மாற்றுக் கடற்பாதைகள் இருக்கின்ற பின்னனியில் ஏடன் வளைகுடாக் கடலில் அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள கடல் முற்றுகையால் மட்டும் ஈரானை அடிபணிய வைத்துவிட முடியாது.
ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு - நொடியில் நடந்த பயங்கரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான பின்னணி
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 26 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam