இஸ்ரேலுடனான போர் அபாயம்! அமெரிக்காவை ஆதரிக்க தயாராகிறதா ஈரான்
இஸ்ரேலுடனான போர் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியை முன்வைப்பதாக இருந்தால், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சவுதி அரேபியா ஈரானை வலியுறுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் மேலும் ஸ்திரமின்மையில் ஏற்படும் பாதிப்பு குறித்து எழுந்துள்ள அச்சம் காரணமாக சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மானுக்கும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த பேச்சுவார்த்தையின்போதே சவுதி அரேபியா ஈரானிடம் இந்த கோரிக்கையிளை முன்வைத்துள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தை
இளவரசரின் வருகையை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டாலும், சவுதி அரேபியா தரப்பின் இரகசிய செய்தியின் உள்ளடக்கம் குறித்து பல்வேறு தரப்புக்களும் கேள்வி எழுப்பி வருகின்றன.
ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வொஷிங்டனுக்கான சவுதி தூதராக இருந்த இளவரசர் காலித், அமெரிக்கத் தலைவருக்கு நீண்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க பொறுமை இல்லை என்று ஈரானிய அதிகாரிகளை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத் தடைகள் நிவாரணம் பெறுவதற்கும் ஈடாக, தெஹ்ரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு வாரத்திற்கு முன்பு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவைப் பெறும் நம்பிக்கையில் இஸ்ரேல் தரப்பு அமெரிக்காவுக்கு சென்றபோது ட்ரம்ப் இதனை கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே அமெரிக்காவின் கருத்தின்படி ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சவுதி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.