வளைகுடாவில் ஈரானின் புதிய வியூகம்: அமீரக கடல்வழிப் பாதையை முடக்கும் மெகா வரைபடம்!
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தற்போது ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, வளைகுடா பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகிறது.
இந்த புதிய வரைபடத்தின்படி, ஈரானின் முபாரக் மலைப் பகுதியிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா வரையிலான ஒரு மிகப்பெரிய கடல் பகுதியைத் தனது முழுக் கட்டுப்பாட்டு மண்டலமாக ஈரான் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் ஈரானின் ஆயுதப் படைகளே போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்கும் என்று ஈரான் கூறியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச் சூழலில் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க ஃபுஜைரா துறைமுகம் வழியாக ஐக்கிய அரபு இராச்சியம் தனது எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டு வந்தது.
ஆனால், தற்போது ஈரான் வெளியிட்டுள்ள புதிய எல்லைக் கோடுகள் ஃபுஜைராவையும் தாண்டி அமைந்துள்ளதால், ஐக்கிய அரபு இராச்சியம் தனது சொந்த கடல் பகுதியைக்கூடப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஈரானின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் ஒரு பெரும் அதிகார மையமாக உருவெடுக்கும் என்றும், இது இப்பகுதியின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதிகாரச் சமநிலையை மாற்றிவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.