இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்..! ஈரான் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராச்சி (Seyed Abbas Aragchi) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் (Pahalgam ) நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் இவ்வாறு அறிவித்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் திகதி தாக்குதல் நடத்தினர்.
இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா (LeT)) ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் அழிக்கப்பட்டன.
எல்லைப் பகுதியில் பதற்றம்
எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை தவிர்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
