இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வ கட்சி ஆட்சியில் இணைய வேண்டும்: இரா.துரைரட்னம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வகட்சி ஆட்சியில் இணைந்துகொள்வதன் ஊடாக இன பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரோக்கியமான வாய்ப்புகள் உருவாகும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "இனரீதியான செயற்பாடுகளுக்கும் சர்வதேச ரீதியான தவறான பார்வைக்கும், மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள் கொண்ட இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லையென்பதை நேற்றைய தினமானது(10) நிரூபித்த நாளாகும்.
நெகிழ்ச்சி
இந்த நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்த கோட்டாபய அரசாங்கத்திற்கு மக்கள் தீர்ப்பளித்த தினமாகும்.
உலகளாவிய ரீதியில் இவ்வாறான ஒரு போராட்டம் நடைபெற்றதா என்ற நிலை காணப்படுகின்றது.
எந்த அரசியல் சாயலும் இன்றி இலங்கையில் உள்ள மூன்று இன மக்களும் ஒன்றுசேர்ந்து சுயமாக கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கண்டனம்
அன்றைய தினத்தில் இலங்கையின் முதுகெழும்பாகவும் இலங்கையில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஊழல்களை, முறைகேடுகளை மற்றும் ஜனநாயகத்தின் மீதான மீறல்களை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நாட்டிலுள்ள எவரின் கருத்துகளையும் உள்வாங்காமல் முன்னெடுக்கப்பட்ட அராஜக அரசு இன்று மக்களினால் வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நாட்டினை முன்கொண்டு செல்லக்கூடிய ஆட்சியமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும்போது தமிழர்களின் இன பிரச்சினையை தீர்க்கும் வகையிலான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் இந்த ஆட்சியமைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உட்செல்வதற்கான அத்திவாரங்கள் இடப்பட வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகள் அழைப்புகள் சர்வகட்சி ஆட்சிக்கு இன்று வழங்கப்பட்டாலும் தமிழர்களுக்கான இன பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு உறுதிப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.