ஜனாதிபதியுடன் தனிப்பட்ட செலவில் அமெரிக்க செல்லும் அயோமா ராஜபக்ச!
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொது சபை கூட்ட தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முதலாவது தடவையாக கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் நடைபெறும் மாநாடொன்றில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் அரச தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை கருத்திற்கொண்டு, குறைந்தளவான தூதுக்குழுவினர் மாநாட்டில் கலந்துகொள்கின்றமை விசேட அம்சமாகும்.
அதனடிப்படையில், பொது சபை கூட்டத்தில் நாட்டிலிருந்து கலந்துகொள்ளும் மிகவும் குறைந்தளவான தூதுக்குழு இதுவென்பதுடன், ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ஸ, தனது தனிப்பட்ட செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.