சட்ட மா அதிபர் திணைக்களம் மீது குற்றச்சாட்டுக்கள்: விசாரணைகள் ஆரம்பம்
சமூக ஊடகங்களில் தமது பணியாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்களில், குறிப்பாக பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் மூத்த அதிகாரிகள் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆதரவளித்ததாக ஒரு மூத்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிணை விவகாரம்
எனினும் இந்த வழக்கின் விசாரணையின் போது, பிணை விவகாரம் கூட பரிசீலிக்கப்படவில்லை என்பதை சட்டமா அதிபர் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கில், மூத்த அதிகாரி ஒருவரின் பிரதிநிதித்துவப்படுத்துவதை சட்டமா அதிபர் தடுத்தார், அதற்கு பதிலாக ஒரு இளைய அதிகாரியை அனுப்பினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
எனினும், குறிப்பிட்ட நாளில், குறித்த மூத்த அதிகாரி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக சட்டமா அதிபர் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களம், இந்த ஆண்டு இதுவரை மேல் நீதிமன்றங்களில் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் பல வழக்குகளை சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ள நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |