காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டோர் சாட்சியம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை இரண்டாவது நாளாக இன்றும் (23.07.2026) மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தன.
காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
சாட்சியம் மற்றும் வாக்குமூலம் பதிவு
இதேபோன்று வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இன்றைய தினம் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன், வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், தங்களுடைய பூர்வாங்க விசாரணைகளினை மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இந்த மாதத்திலே நடத்தி வருகின்றார்கள்.
அந்த வகையிலே இன்றைக்கு ஆரையம்பதி, செங்கலடி மற்றும் வாவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமலாக்கப்பட்டதாக பதிந்து ஏற்கனவே குடும்பங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள், விசாரணைக்கு பூர்வாங்க விசாரணைக்கு வருகை தருமாறு.
அந்த வகையிலே வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள் வருகை தந்து இன்று தங்களுடைய சாட்சிகளுடன், விண்ணப்பதாரிகள் தங்களுடைய வாக்குமூலங்களினைப் பதிந்து வருகின்றார்கள், அதற்கென்று அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்பதாக.
இதற்கமைவாக அழைக்கப்பட்டவர்களில் முதலாவது நாள் – நேற்று முன்தினம் 233 பேரும், நேற்று 203 பேரும், இன்றைக்கு இதுவரைக்கும் 150 பேர், மூன்று பிரதேச செயலகப் பிரிவிலுமாக மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைப்பாடுகளினைத் தங்களுடைய சாட்சிகளினை, தங்களுடைய வாக்குமூலங்களினை இங்கே பதிவு செய்திருக்கின்றார்கள்.
பூர்வாங்க விசாரணைகள்
இது வந்து ஒரு நடைமுறை முறையின் ஒரு முதன்மையான அம்சம். இது வந்து 2000ஆண்டுக்கு முன்பதாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பூர்வாங்க விசாரணைகள்.
உங்களுக்குத் தெரியும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி ஏற்கனவே ஒரு சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகப் பணியகத்தால முன்னெடுக்கப்படுகின்ற ஒரு நிகழ்வுக்கு அமைவாக, நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக இது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இதிலே வந்து வருகை தருபவர்கள், அநேகமானவர்கள் ஏற்கனவே தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் சம்பந்தமாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே இறப்பினை உறுதி செய்து இறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றிருக்கின்றார்கள்.
எனவே, எங்களுக்கு அதிலே இருக்கின்ற சிக்கல் நிலை என்னவென்று சொல்லிச் சொன்னால், கூடுதலானவர்களுக்கு அந்த இறப்பு சம்பந்தமான விபரங்களினையும் காணாமல் போனமைக்கான காரணங்களினையும் இறப்புச் சம்பந்தமான காரணங்களினையும் நாங்கள் துல்லியமாக அறிய வேண்டிய தேவை இருக்கின்றபடியால், எதிர்பார்த்ததை விடவும் சற்று கால நேரம் கூடுதலாகத் தேவைப்படுகின்ற ஒரு தேவை இருக்கின்றதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்றார்.






