கோவிட் நிலைமை தொடர்பில் வைத்தியர் வெளியிட்ட தகவல்! - குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் நபர்கள் ஈக்களைப் போல செத்து விழுவதாக முகநூலில் பதிவிட்ட அவிசாவளை வைத்தியசாலை வைத்தியர் நஜீத் இந்திக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
அவிசாவளை வைத்தியசாலைக்கு வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இவ்வாறு வாக்குமூலம் பெற்றதாக வைத்தியர் இந்திக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவேகுற்றப்புலனாய்வு பிரிவினர் என்று கூறிக் கொண்டு வைத்தியசாலைக்கு தன்னை தேடி வந்ததாக இந்திக்க முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அவ்வாறு தமது குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து எவரும் வரவில்லை எனவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் தன்னிடம் கூறியதாக வைத்தியர் தெரிவித்தார்.
ஏற்கனவே தன்னை தேடி வந்த நபர்கள் பின்வழியாக வர முயற்சித்ததாகவும் அவர்கள் புலனாய்வு பிரிவினராக இருக்கக்கூடும் எனவும் தனது மனநிலையை சோதனை செய்ய வந்ததாக அவர்கள் கூறியிருந்ததாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு வைத்தியர் எனவும் தனது மனநிலையை பரிசோதனை செய்ய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு முடியாது எனவும் கருத்து வௌியிடும் தனது சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
