யாழ்ப்பாணத்தில் சமய ஆற்றுப்படுத்தல் கற்கை அறிமுகம் செய்ய முயற்சி
உடல் நலக்குறைவுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் உளஆறுதல் மற்றும் உள்ளார்ந்த ஆதரவு தேவைப்படுவோருக்கும் துணையாக இருக்கும் சேவையே “ஆற்றுப்படுத்தல்” என அழைக்கப்படுகிறது.
இது வெறும் சமய நம்பிக்கையுடன் மட்டும் தொடர்புடையதல்ல. மாறாக மனிதர்களின் உள்ளப் போராட்டங்கள் உளச்சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைச் சவால்களில் ஒருவருக்கொருவர் துணைநிற்கும் நம்பிக்கையூட்டும் மனிதநேயத் தொண்டாகும்.
“சமய ஆற்றுப்படுத்தல்” என்ற கல்வி முறை மேற்குலகில் கிறித்தவச் சமய அடிப்படையில் வளர்ச்சியடைந்தாலும், அதன் சாரம் உலகின் பல கலாசாரங்களிலும் பழங்காலத்திலிருந்தே காணப்படுகிறது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 700 ஆண்டுகளாக இக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
முதன்முறை அறிமுகம்..
2002ஆம் ஆண்டு, கிறித்தவர்கள் அல்லாதவர்களும் பங்குபெறக்கூடிய சமய ஆற்றுப்படுத்தல் கற்கையை சுவிட்சர்லாந்தின் பேர்ன் பல்கலைக்கழகம் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.
இக்கற்கையில் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தார். 2021ஆம் ஆண்டு “பல்சமய, பல்பண்பாட்டு ஆற்றுப்படுத்தல் மன்றம்” பேர்ன் நகரில் நிறுவப்பட்டது.

அதன் தொடக்க காலம் முதலே சைவநெறிக்கூடம் இதில் பங்காளியாக இணைந்துள்ளது. பேர்ன் மாநிலத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களில் உளஅழுத்தம் அல்லது வாழ்வாதார சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்கள் தாங்கள் விரும்பும் சமய அல்லது சமயம் சாராத ஆற்றுப்படுத்தல் வழிகாட்டலை இம்மன்றத்தின் மூலம் பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
சைவநெறிக்கூடத்தைச் சேர்ந்த அருட்சுனையர்கள் உட்பட 11 பேர் ஆற்றுப்படுத்துநர் சிறப்புக் கற்கையை கற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை நடுவமாகக் கொண்டு தமிழ் மொழியில் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு திருத்தம் தேவைப்படுகிறதா, ஆறுதல் வேண்டுமா, ஆதரவு தர வேண்டுமா என்பதை உணர்ந்து செயல்படக் கற்றுத்தரும் திறனே இந்தக் கல்வியின் முக்கிய அம்சமாகும். ஆற்றுப்படுத்தல் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அமையாது என்பதை வலியுறுத்தப்படுகிறது.
சில உளநிலைச் சிக்கல்களுக்கு உளவியல் அல்லது மருத்துவ சிகிச்சை அவசியமாக இருக்கலாம்; அத்தகைய சூழல்களில் ஆற்றுப்படுத்தல் துணைச் சேவையாக செயல்படும். பேர்ன் மாநிலத்தில் சைவநெறிக்கூடம் செவிமடுக்கல், புரிதல், மதியுரை, வழிகாட்டல், கட்டமைக்கப்பட்ட ஆதரவு மற்றும் சட்ட வரம்புக்குள் தீர்வுகள் வழங்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய கலந்துரையாடல்
நம்பிக்கை, மரியாதை மற்றும் பொறுமையை அடிப்படையாகக் கொண்ட மனிதநேயத் தொண்டாக இச்சேவை அமைகிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்து பேர்ன் நகரில் வழங்கப்பட்டுவரும் இந்த சமய ஆற்றுப்படுத்தல் கற்கையை இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூகப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுச் சமூகப்பணியாளர்கள் இக்கற்கையைப் பெற்று, மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களில் சமய மற்றும் சமயம் சாராத ஆற்றுப்படுத்தலை வழங்கும் நோக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஆராய்வதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துப் பண்பாட்டு பீடத்தின் தலைவர் திருநிறை பிரம்மசிறி சர்வேஸ்வர் ஐயர் பத்மநாபனை சைவநெறிக்கூடத்தின் பிரதிநிதிகள் 29.01.2026 அன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவத்திரு செல்லத்துரை பிரசாத், இளையோர் மன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி லாவண்யா இலக்ஸ்மணன் மற்றும் மருத்துவர் லாவண்யா யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேர்ன் பல்கலைக்கழகத்தின் கல்வி வளத்துடன் இந்த கற்கையை வழங்க சைவநெறிக்கூடம் தயாராக இருப்பது வரவேற்கப்பட்டது.
தேவையான வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. உடல் நலத்துடன் உள்ளநலமும் பேணப்பட வேண்டும் என்பதையும் இம்முயற்சி சமூக நலத்திற்கு பெரிதும் துணைபுரியும் என்பதையும் சந்திப்பில் நம்பிக்கையுடன் வலியுறுத்தப்பட்டது.





ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam