தமிழர்களும் முஸ்லிம்களும் ஓரணியில் திரள வேண்டும்! விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு
பௌத்த - சிங்கள இனத்தை நாடு முழுவதும் மேலாதிக்கம் கொள்ள வைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வு, அடையாளம், கலாசாரம், தாயகம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது வேற்றுமைகள், கசப்புணர்வுகளை கைவிட்டு ஓரணியில் நின்று செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran ) தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான உரிய அதிகாரப் பகிர்வு ஏற்பாடு ஒன்றை இணைந்த வடக்கு - கிழக்கில் ஏற்படுத்துவதே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நண்பர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்தவராகவே இருந்து வந்துள்ளார். அதனை வலியுறுத்தியும் உள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சில தமிழ் அரசியல்வாதிகளைப் போலவே தமது குறுகிய சுய இலாபங்களுக்காக ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வடக்கு - கிழக்கு இணைப்பை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் இத்தகைய கருத்துக்களின் பின்னால் உள்ள சுய நோக்கங்களை முஸ்லிம் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு நன்மையையே பெற்றுக் கொடுக்கும்.
கேள்வி - தமிழ் தரப்புக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க ஒரு அரசியல் குழு அமெரிக்கா செல்கிறது. அந்த குழுவில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக தங்களுடன் ஏதாவது பேச்சுக்கள் இடம்பெற்றனவா?
பதில் : இல்லை. இந்த விஜயத்தின் உண்மைத்தன்மை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இதுபற்றி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு நான் கருத்து வெளியிட்டிருந்தேன். தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்துடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இராஜதந்திர செயற்பாடுகளிலும் ஈடுபடுவது அவசியம்.
சர்வதேச ரீதியான மத்தியஸ்தம் இல்லாமல் எமது பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண முடியாது. அந்த அடிப்படையில் அமெரிக்காவுடன் பேசுவதற்கு தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. இதில் எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ அல்லது பொறாமையோ இல்லை .
இதில் எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ அல்லது பொறாமையோ இல்லை. இதில் எனக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ அல்லது பொறாமையோ இல்லை. எந்தப் பின்னணியில் எவர் பேச்சுக்குச் சென்றாலும் எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான நிலைப்பாடுகளை அவர்கள் செல்லும் இடங்களில் தெளிவாக வலியுறுத்தும் வரையில் எனது ஆதரவு அவர்களுக்கு இருக்கும். அவர்கள் அவ்வாறு வலியுறுத்துவதால் எமக்குள் முரண்பாடுகள் எதுவும் ஏற்படப் போவதில்லை.
ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு பரவலாக்க ஏற்பாடும் இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றாது. ஏற்கனவே ஒற்றை ஆட்சியின் கீழான 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. ஆகவே ஒற்றை ஆட்சியின் கீழான எந்தவொரு தீர்வும் இதே மாதிரியான நிலைமையையே மேலும் ஏற்படுத்தும்.
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். இதனையே அமெரிக்க செல்லும் தமிழரசுக் கட்சியின் குழு வலியுறுத்த வேண்டும். இதனை நான் ஏற்கனவே இந்த குழுவில் அங்கம் வகிக்கும் எனது நண்பர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல இனப்படுகொலைக்காக பொறுப்புக் கூறல் சர்வதேச விசாரணை ஆகியவை தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதுடன் ஆட்சி மாற்றங்களுக்கான கருவிகளாக அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ் மக்களைப் பயன்படுத்த இடமளிக்காமல் செயற்பட வேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.