சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீம் மனைவி உட்பட 6 பேரும், மொஹமட் முபாரக்கின் மனைவி உட்பட மேலும் 4 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருத்தப்படும் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதீயா உட்பட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹமட் முபாரகின் மனைவி அயேஷா சித்திகா உள்ளிட்ட 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.