ஜனாசாக்கள் தகனம் செய்யும் விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்ய வேண்டும்! அசாத் சாலி
இஸ்லாமியர்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யும் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டுமென மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கோரியுள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவு மூலம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொவிட் நோய்த் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யாமல், தகனம் செய்யும் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பலவந்தமாக ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் தந்திரோபாயத்தை அரசாங்கம் பின்பற்றி வருவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பெய்டன், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அன்டர்சன் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களிடம் டுவிட்டர் மூலம் இந்த கோரிக்கையை அசாத் சாலி முன்வைத்துள்ளார்.
It's time the international community intervene on Sri Lanka's forced cremation strategy against minorities. Will you? @JoeBiden @BorisJohnson @JustinTrudeau @jacindaardern @RTErdogan @HHShkMohd @KingAbdullahII @chedetofficial @jokowi @ImranKhanPTI @QueenRania
— Azath Salley (@MAzathSSalley) December 27, 2020