போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை: பிரதமர் பகிரங்கம்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(24) நடைபெற்ற வாய்மொழி மூல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு உடன்படவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மக்களின் உரிமைகள்
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும், அந்தச் செயன்முறையானது, உள்ளகச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை
இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசு எதிர்ப்பதாகவும் பிரதமர், நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.