காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில் இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்.
அத்துடன், தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் தாய்மார்களுக்குப் பதில் சொல்லாமல் மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(16.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போர் வேளையிலும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டநிலையிலும், இராணுவத்தாலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்ட நாள் தொட்டு தமது உறவுகளைத் தேடி வீதியில் இறங்கிய ஒவ்வொரு தமிழ் தாய்மாரும், ஒவ்வொரு தமிழ் தந்தைமாரும், உறவினர்களும் இணைந்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினை ஆரம்பித்தோம்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இராணுவத்தினரின் அட்டகாசங்கள்
இந்த போராட்டங்களில், இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகள் எங்கே? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சிறீலங்காவின் நீதித் துறையில் எமக்கு நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை, மீளநிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், சிறீலங்காவை பொறுப்புக்கூறலை நோக்கி சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியறிவதற்கென சிறீலங்கா அரசு அமைக்கும் ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் ஏமாற்று நாடகங்கள் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.

இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல்கள், விசாரணைகள், கண்காணிப்புகள், வயது முதிர்வு, நோய், வறுமை போன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் துவண்டுபோகாது - விட்டு விலகிவிடாது எமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த போராட்டமானது எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு மட்டுமானதல்ல, இனிவரும் காலங்களில் எமது பிள்ளைகளைப் போல இன்னொரு மகளோ, மகனோ கடத்திக் காணாமலாக்கப்படக்கூடாது என்பதற்கான ஓர் அரணாகவே நாம் எல்லாத் துயரங்களையும் தாங்கித் தெருவில் நிற்கின்றோம்.
இந்த மண்ணில் எம்மைப் போல இன்னொரு தாய் கலங்கி நிற்கக்கூடாது என்பதற்காகவே மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகின்றோம் என்றார்கள்.