கரும்புத்தோட்ட காணி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்:அரச அதிபர்
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வருகின்ற ஸ்கந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியினை அமைப்புகளின் பெயரில் அபகரித்துப் பகிர்ந்துகொள்ள அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அக்கராயன் பிரதேச பொது மக்களும் சில அமைப்புகளும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சீனி தொழிற்சாலை இயங்கி வந்த காணியினை மீண்டும் அவ்வாறு நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தமிழ் மக்களுக்குச் சாதகமான கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்காத அரசியல் தரப்புக்கள் தற்போது குறித்த காணியினை கூட்டுறவு அமைப்புகளின் பெயரில் பெற்று முறைகேடான வகையில் பகிர்ந்தளிக்கவுள்ளதான தகவல்கள் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், அதற்கான பட்டியல்கள் முன்னாள் போராளிகள் மற்றும் காணியற்றவர்கள் என்ற போர்வையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் குறித்த ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கிளிநொச்சி கரும்புத்தோட்டக் காணி தொடர்பில் அரச அதிகாரிகள் முறையான நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரும்புத் தோட்டக்காணியினை வைத்தியர் த . சத்தியமூர்த்தி அவர்கள் பயன்படுத்தி வருவதாகக் குறித்த அரசியல் தரப்பினரால் ஆதாரமற்று குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரிடம் இது தொடர்பில் நாம் வினவிய போது "சில வருடங்களுக்கு முன்னர் தொழில் முயற்சி ஒன்றின் ஊடாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க எத்தனித்த போதும் சிலரின் குறுக்கீடு காரணமாக உடனடியாக முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இப்போது எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் என் மீதான அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போது அக்காணிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனை நான் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது,
குறித்த கரும்புத்தோட்டக் காணி தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை, ஆரம்பத்தில் குத்தகைக்கு ( லீசிங்) எடுத்துப் பயன்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் இவ்வருடமும்(2020) அவர்கள் பயிர்ச் செய்கை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கரும்புத் தோட்டக்காணி தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
எனவே எதிர்காலத்தில் குறித்த காணியினை என்ன செய்வது யாருக்கு வழங்குவது போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.