அட்சய திதியை முன்னிட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தல்
அட்சய திதியை முன்னிட்டு நகைக் கடைகளுக்குள் மக்களை கூட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் தாக்கத்தின் மூன்றாவது அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அட்சய திதியாகும். அன்றைய தினம் நகைகளை கொள்வனவு செய்யும் வகையில் வாடிக்கையாளரை கவருவதற்காக விளம்பரங்களை செய்து மக்களை நகைக்கடைகளுக்குள் அதிகமாக வரச் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதுடன், மக்களை கடைகளுக்குள் அதிகமாக திரட்டினால் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் நகைக்கடைகளின் இட வசதி மற்றும் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 வீதமானவர்களுக்கு மட்டுமே கடைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன், இறுக்கமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
அதனை விடுத்து, அட்சய திதி
வியாபாரத்திற்காக நகைக்கடைகளில் மக்கள் கூடினால் குறித்த கடைகளுக்கு
எதிராகவும், சுகாதார அறிவுறுத்தல்களை மீறி ஒன்று கூடியவர்களுக்கு எதிராகவும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.