ஞானசார தேரரின் எச்சரிக்கை குறித்து விசாரணை! - அமைச்சர் சரத் வீரசேகர
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara), இரண்டாவது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அரசு என்பது குரானில் உள்ள சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்தாந்தம் என்று அமைச்சர் வீரசேகர இதன்போது குறிப்பிட்டார்.
எனவே இலங்கையில் ஐஎஸ் சித்தாந்தம் இருக்கும் வரை தாக்குதல் இருக்கலாம். அத்தகைய கருத்தியலைக் கொண்டிருக்கும் எந்த இளைஞரும் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்பதையே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
"குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட வஹாபிசம், குடும்பங்கள் சொர்க்கத்தில் நுழைய வேண்டுமானால் இஸ்லாமியத்திற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
அண்மையில் நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையில் பிறந்த இஸ்லாமியர், 2017 முதல் கண்காணிக்கப்பட்டு பின்னர், அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டார் என்று வீரசேகர தெரிவித்தார்.
இலங்கையில் வஹாபிசத்தை ஊக்குவித்ததற்காக சில இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியதாகவும் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.