விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 9 மாதங்களுக்குள் 700,000 இற்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 700,733 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
இரட்டிப்பாகியுள்ள கடவுச்சீட்டு விநியோகம்
கடந்த 2021ஆம் ஆண்டின் 12 மாதங்களுக்குள் 300,000 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகள்
கடந்த ஆண்டில் மாத்திரம் 392,032 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகளின்படி, 2022 முதல் ஒன்பது மாதங்களுக்குள் 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ஆகஸ்ட் மாதத்தில் 115,286 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



