பரிகார பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் - கல்முனையில் சம்பவம் (Photos)
உணவக உரிமையாளர ஒருவரின் மனைவியும் உணவகத்தின் காசாளருமான பெண்ணிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இரு இந்தியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த இரு இந்தியர்கள் 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள நிலையில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20.12.2023) இரவு இடம்பெற்றுள்ளதுடன், மறுநாள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுாதன முறையில் திருட்டு
சம்பவ தினமான புதன்கிழமை அன்று, சந்தேகநபர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியுடன் உரையாடியுள்ளனர்.
இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில், சம்பவ தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது, குறித்த பூஜைக்கு இணங்கிய பெண், தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை பூஜைக்காக ஒரு மண்சட்டியில் போட்டு மூடி சந்தேக நபர்களிடம் கொடுத்துள்ளார்.
பூஜையின் இடை நடுவில், சந்தேக நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிக்காய் ஒன்றை வீட்டின் உள்ளே வைப்பதற்காக அந்த பெண் சென்றுள்ளார்.
அச்சமயம், உடனடியாக செயற்பட்ட இரு சந்தேகநபர்களும் ஏற்கனவே கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை நகைகள் இடப்பட்ட மண்சட்டிக்கு பதிலாக மாற்றி வைத்துள்ளார்கள்.
காத்திருந்த அதிர்ச்சி
பூஜையை நிறைவு செய்த பின்னர், தங்க நகை அடங்கிய மண்சட்டியை எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியிடம், 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி இருவரும் விடை பெற்று சென்றுள்ளனர்.
தொடர்ந்து, குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியிடம் கழுத்தில் இருந்த நகை எங்கே என்று கேட்க நடந்த அனைத்து விடயங்களையும் அந்த பெண் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த உணவக உரிமையாளர் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்க்க, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
உடனடியாக சம்பவத்துடன் தொடர்புடைய இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள், இறுதியாக ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
