யாழ்.கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்களால் பதற்றம் (VIDEO)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய படகுகள் யாழ்.கடற்கரை பகுதியில் வைத்து சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது இந்திய மீனவர்களுக்கும்,இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்திய மீனவர்களினால் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில்
ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால்
சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சுப்பர் மடம் பகுதியில் மக்கள் ஒன்றிக்கூடியுள்ளமையினால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களின் இழுவை மடி படகுகளை வெட்டி சேதப்படுத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்போது கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் கொண்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால்,மீனவர்கள் போதையில் காணப்படுவதாக தெரிவித்து அவர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.