எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலார்களுக்கு விளக்கமறியல்(Video)
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலார்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 கடற்றொழிலார்களும் , மயிலாடுதுறையை சேர்ந்த 7 கடற்றொழிலார்களும் கடந்த 30ஆம் திகதி காரைக்காலில் இருந்து படகில் கடற்தொழிலுக்காக புறப்பட்டுள்ளார்கள்.
கடற்றொழிலார்கள் தடுத்து வைப்பு
குறித்த கடற்றொழிலார்கள் நேற்றைய தினம் பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
மன்றின் உத்தரவு
விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் கடற்றொழிலார்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முற்படுத்தினர்.
இந்நிலையில் மன்று அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இன்றும் 5 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.