இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது (Video)
புதிய இணைப்பு
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
காரைநகர் கோவளம் கடற்பரப்பில் நேற்று இரவு இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடற்தொழிலாளர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதலாம் இணைப்பு
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் குறித்த கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களையும், படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடற்தொழிலாளர்களுக்கு மலேரியா, கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர்.





