ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை மீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட போதும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிளை மரியதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெய் மானியத்தை வழங்கியமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
கடற்றொழிலாளர்களுக்காக கடந்த ஆட்சியில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மண்ணெண்ணெய் மானியத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினார்.

அவருக்கும் எமது நன்றிகள். மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர பதவிக்கு வந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் நல்லெண்ண செயற்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கடந்த புதன்கிழமை மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்களின் பெறுமதி மிக்க வலைகளை அறுத்து நாசம் செய்துள்ளனர்.
ஆகவே இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இலங்கை ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடையுங்கள் என கோரினார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam