இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கு கார்த்திகை மலர் அணிவிப்பு - இந்தியாவின் ராஜதந்திர சவால்?
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதித் தூதரகத்தின் பிரதானியான இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் (Rakesh Natraj Jeyabaskaran), இலங்கைக்கு ராஜதந்திர சவால் விடுத்து விடுதலைப் புலிகளின் தேசிய மலரான கார்த்திகை மலரை (காந்தள் மலர்) சட்டையில் அணிந்து, மரணித்த புலிகளை நினைவுகூரும் நிகழ்வில் கலந்துகொண்டதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
யாழ் - நல்லூரில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவில் கடந்த 20 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் கமத்தொழில் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு வடக்கில் நவம்பர் மாதம் நடைபெறும் மர நடுகை வேலைத்திட்டத்திற்கு அமைய கிட்டுப் பூங்காவில் மரககன்றுகளை வழங்கும் நிகழ்வில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உட்பட சிறப்பு விருந்தனர்களுக்கு கார்த்திகை பூ அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதி உயரஸ்தானிகர் ரிப்பனை வெட்டி மரக் கன்று விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் புலிகளின் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.