ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றம்: இந்தியா தடுக்க வேண்டுமென த.தே.ம.முன்னணி கோரிக்கை
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.
இது தொடர்பில், நேற்று(20.02.2026) கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மீண்டும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையா..! சபையில் அரசாங்கத்திற்கு பகிரங்க வலியுறுத்தல்
இந்த சந்திப்பில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயரஸ்தானிகர் சத்தியஞ்சல் பான்டே மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (கொன்சூலர் ஜெனரல்) சாய் முரளி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன் மத்தியகுழு உறுப்பினர் தீபன்திலீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதன்போது, அநுர அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் கொண்டுவரவுள்ள புதிய ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு தொடர்பிலும் மற்றும் இந்த அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள், ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கியதான ஜனநாயக விரோத போக்குகள் குறித்தும் இந்திய தூதரக பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு என்னும் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அநுர அரசாங்கம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2015 - 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கியராஜய’ அரசியலமைப்பு வரைபையை அரசியலமைப்பாக கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த வரைபானது இதுவரை இருந்து வருகின்ற அரசியலமைப்பில் உள்ளதைப் போன்ற ஒற்றையாட்சி முறையாகும். அந்த வரைவு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானதாகும்.
இவ்வாறான தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் புறக்கணிக்கும் அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய தீர்வு எட்டும் வகையில் ‘சமஸ்டி’ அரசியலமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும்.
அதன் மூலமே தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தின் வெளிபாடே கிவுல் ஓயா திட்டம்
இந்நிலையில், அநுர அரசின் ஆட்சியிலும் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த இந்திய அரசு இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிரால் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக ‘கிவுல் ஓயா’ திட்டம் தமிழர் தாயகத்தின் இன பரம்பலை மாற்றியமைக்கும் குறிக்கோளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 1985 ஆம் ஆண்டில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மீளக்கூடியமர அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒற்றையாட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளி மாகாணங்களை சேர்ந்த சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்றினார்கள்.
அவ்வாறு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயத்திற்கான மேலதிகமான நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கே இந்த திட்டம் 2013-ல் ராஜபக்சாக்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இதே திட்டத்திற்கே 2026ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2000 கோடி நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததுடன், கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத திட்டத்தையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இனப்பரம்பலை ஊக்குவிக்கும் வகையில் நீதி ஒதுக்கீடு
மேலும், சிறிலங்கா பொருளாதாரத்தில் விழுந்திருக்கும் தற்போதைய சூழலில், நாடு பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவிலேயே முழுவதுமாக தங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவை நாடி நிற்கின்றது. இவ்வாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களது உதவிகளை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடும்.
அதேவேளை, தனது திறைசேரி மூலம் நிதி ஒதுக்கீடுகளை செய்து சிங்கள பௌத்தமயமாக்கலையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளையும் தமிழர் தேசத்தின் இருப்புக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றது.
தமிழர் பகுதியில் நடக்கும் அரசின் அட்டகாசங்கள்
கடந்து வந்த அரசாங்கங்கள் செய்த அதே இனவாத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் செய்து வருகிறது. ‘கிவுல் ஓயா’ திட்டம் தமிழர்களின் இருப்புக்கு எதிரானது என்ற வகையில் இந்திய அரசு தலையீடு செய்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற விடயமும் முன்னணியினரால் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், ‘பிரஜா சக்தி’ என்கின்ற திட்டம் ஊடாக கட்சி உறுப்பினர்களை நியமித்து அதிகாரத்தை வழங்கி அரச நிர்வாக கட்டமைப்பை கேலிக்குள்ளாக்கும் செயற்பாடு, வுலிகாமம் வடக்கில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென மக்கள் கோரிவரும் நிலையில் இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் பல நடந்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.
அதே போன்று, பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தாமதப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில், அந்த அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan