தடைகளைத் தாண்டி இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானங்கள்
இந்தியப் பயணிகளின் வருகை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து ஏராளமான விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
எனினும் விமானங்கள் அனைத்தும் சரக்கு விமானங்கள் அல்லது இடைத் தரித்து செல்லும் விமானங்கள் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்குச் சொந்தமான பல விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலை ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E8481 விமானம் மற்றும் மும்பையிலிருந்து இலங்கை விமானச் சேவையின் யுஎல் 144 விமானம் ஆகியன வெள்ளிக்கிழமை தரையிறங்கியுள்ளன.
மும்பையிலிருந்து எயார் இந்தியா விமானம் AI275, சென்னையிலிருந்து இலங்கை விமான சேவையின் UL126 மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E8481 ஆகியன சனிக்கிழமை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
பெங்களூரிலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தின் 6E8485 விமானம் நேற்று தரையிறங்கிய விமானங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.
இந்தியர்களை நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சரக்கு விமானங்கள் இலங்கைக்கு வருகைத்தந்ததாக, சுற்றுலா அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பயணிகள் சேவை விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியும் என்றாலும், எந்தவொரு பயணிகளும் வினானத்தில் கீழே இறங்க முடியாது எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட பி 1.617 என்ற திரிபடைந்த கோவிட் வைரஸ் குறித்து இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியாவில் பரவும் திரிபடைந்த வைரஸ் தொற்று இலங்கையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரிடம் கண்டறியப்பட்டிருந்தது.
இந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மே 6ஆம் திகதி முதல் இந்தியர்களுக்கு இலங்கை பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.