மலையக மக்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்: கோபால் பக்லே
மலையக மக்களைப் பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மலையக பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
'மலையக மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நோர்வூட் மைதானத்திற்கு வந்தது வரலாற்று முக்கியதுவம் மிக்கது.
அன்று பிரதமர் மோடிக்கு நீங்கள் கொடுத்த அன்பு, பாசம் என்பவை முக்கியமானவை. அதற்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மறப்பதில்லை அல்லவா? அதேபோன்று தான் தாய் இந்தியா தனது பிள்ளைகளை ஒரு போதும் மறக்காது.
மலையக அபிவிருத்திக்காகத் தொடர்ந்தும் இந்தியா அதீத சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது. முக்கியமாக நான்காவது கட்டத்தில் பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தை மலையகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். மலையகத்தின் கல்வித்துறையிலும் இந்தியா அக்கறையும் செயற்படுகின்றது.
மலையக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை
இந்தியா வழங்குகின்றமை இதன் ஒரு பகுதியாகும். இதன் மூலம் சிறந்த நன்மைகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உறவின் உன்னதத்தைக் கூறும்
தைப்பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.