இந்தியத் தூதுவருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் பற்றி பேசப்பட்டது.
வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 13ம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சம்பந்தன் முன்வைத்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான விஜயத்தின் போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் இங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் பல விடயங்களை நேரில் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவலாக உள்ளது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் வேறு பல விடயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டன என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.