யாழ் பல்கலை விவகாரத்தில் - இந்தியாவின் திடீர் தலையீடு! துணைவேந்தர் கூறிய முக்கிய தகவல்
யாழ்.பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட தூபியை மீள நிர்மாணிப்பதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை அமைதியில் அடிக்கல் நாட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா சென்றபோது, இடையில் குறுக்கிட்ட பொலிஸ் அதிகாரியிடம், "இவ்விடயம் தொடர்பான பிரச்சினை இந்திய தமிழ்நாட்டுக்கும் போய் அங்கே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது".
"ஆகவே அரசாங்க மேலிடம் இதை சுமூகமாக முடிக்க சொல்லி விட்டது" என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இன்னமும் இலங்கை பிரச்சினையில், தமிழகத்துக்கு ஒரு வகிபாகம் இருக்கின்றது இதன்மூலம் புலனாகிறது.
அங்கே, இப்போது தேர்தல் காலம். ஆகவே "இலங்கை பிரச்சினை" பற்றிய பேச்சுகள் வழமையைவிட உரக்கவும், பரவலாகவும் நடைபெற்றாலும் சரி, இங்குள்ள சில தமிழ், சிங்கள அரசியல் தரப்புகள் அவ்வப்போது தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடித்து, திட்டி தீர்த்தாலும் சரி, இதுதான் உண்மை நிலவரம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கும் பொருட்டு இன்றையதினம் பல்கலைக்கழக துணைவேந்தரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் இந்த திடீர் மனமாற்றத்திற்கும், முடிவுக்கும் இந்தியாவில் இருந்து பிரயோகிக்கப்பட்ட அரசியல் சார்ந்த அழுத்தங்களே காரணமென பல்கலைக்கழக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதேவேளை, இத்தூபி சட்டவிரோதமான தூபியெனவும், இது குறித்து கருத்துவெளியிட எதுவும் இல்லையெனவும் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அசண்டையீனமாக கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.