மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இராஜதந்திர முறையிலான முன்னெடுப்பு : நாடாளுமன்றில் டக்ளஸ் எடுத்துரைப்பு
மீனவர்களின் விவகாரத்தில் இரு நாடுகளும் தொடர்புபடுவதால், இராஜதந்திர முறையிலான முன்னெடுப்புகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் ஏனையோர் போன்று பொறுப்பற்ற முறையில் ஏனோ தானோ என்று தன்னால் கதையளக்க முடியாது எனவும் நாடாளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோதத் தொழில்முறைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் விசேட அறிக்கையினை சமர்ப்பித்து உரையாடற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல். நான்கு திட்டங்களை முன்வைத்து உறுதியுடன் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன், கடந்த 27 ஆம் திகதி பருத்தித்துறை வத்தராயனில் இருந்து கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலியையும் தெரிவித்துள்ளார்.
நீதிக்கான குரல்கள் ஒலிக்கட்டும் நியாயங்கள் வெல்லட்டும் என்று தான் கேட்டுக்கொண்டதற்கு அமைய நீதிக்காக குரல் கொடுக்கும் கடற்றொழிலாளர்களின் கூடாரத்தில் அநீதியின் குழப்பக் காரர்கள் புகுத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"எமது கடல் எல்லை வளங்கள் யாவும் எமது மக்களுக்கே சொந்தம். கடல் எல்லைத் தாண்டி வந்து அத்துமீறுகின்ற செயல் இன்று நேற்றுள்ள பிரச்சினை அல்ல. அது, நீண்ட கால பிரச்சினையாகும். இதற்கு முடிவு கட்டிட நான் எடுத்து வருகின்ற முயற்சிகள் யாவும், வெறும் சுயலாப அரசியல் நோக்குடையவை அல்ல. இது என் உதிரத்திலும், உணர்விலும் ஒன்று கலந்துவிட்ட பிரச்சினைகளில் ஒன்றாகும்.
நான் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னரும் நேரில் சென்று, களத்தில் நின்று எமது கடற்றொழிலாளர்களின் விவகாரங்களை சரிவரக் கையாண்டிருக்கின்றேன். கச்சதீவில் இரு தரப்பு கடற்றொழிலாளர்களையும் வைத்து, பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறேன்.
அதுமட்டுமன்றி, இந்திய மத்திய, மாநில தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடனும் கலந்துரையாடி வருகின்றேன். ஆகவே, இது என் கடமை மட்டுமல்ல, என் உள்ளார்ந்த உணர்வும் கூட. இந்தப் பிரச்சினையில் இரு நாடுகளும் தொடர்புபடுவதால், இராஜதந்திர முறையிலான முன்னெடுப்புகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, இழுவை வலைப் படகுகளின் மூலமான தொழில் முறை என்பது இரு நாட்டு கடல் வளங்களைச் சுரண்டுவதுடன், மீனின இனப் பெருக்கமும் அழிவுற்று வருகின்றன. அதேநேரம், எமது கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள், படகுகள் என்பனவும் பாதிக்கப்பட்டு, அழிவடைகின்றன.
எனவே, இது தொடர்பில் இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கிடையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல். அடுத்ததாக, எல்லைத் தாண்டி வருகின்ற இழுவை வலைப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல். அடுத்து, இவ்வாறு சட்ட நடவடிக்கைளின் ஊடாக அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை, அவற்றின் இழுவை வலை மடிகளை அகற்றி, எமது கடற்றொழிலாளர்களுக்கு நீதமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுத்தல். இராட்சத படகுகளை எதிர்கொண்டு, சிறிய படகுகளில் தொழில் செய்ய இயலாத எமது கடற்றொழிலாளர்களுக்கு இது தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், அவர்களது வாழ்வாதாரங்களை உயர்த்துவதாகவும் அமையும்.
இந்த திட்டங்களே நான் வகுத்திருக்கும் திட்டங்களாகும். நீதியான தீர்வு நோக்கிய எமது கடற்றொழிலாளர்களின் குரல் வளைகளை நெரிப்பதுபோல், நீதியின் கூடாரத்தினுள் ஒட்டகங்களும், குள்ள நரிகளும் நுழைந்தன. ஆனாலும், நீதியின் குரலாக நிமிர்ந்த எங்கள் கடற்றொழிலாளர்களின் தீர்வு நோக்கிய பயணத்தை திசை திருப்ப முயன்றவர்கள் தோற்றுப் போனார்கள்.
இதற்கு முன்னர் உள்ளூர் இழுவை வலைப் படகுகளிலிருந்து கடற்றொழில் அமைச்சர் ஒரு இரவுக்கு ஒரு படகிலிருந்த 5000 ரூபா வீதம் பெறுவதாகநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் 22.10.2021 நாடாளுமன்றத்தில்; தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியே அவர் இந்த அப்பட்டமான பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார்.
அவரது அக் கூற்றில் உண்மை இருப்பதாக அவர் கருதினால், நீதிமன்றத்தின் ஊடாக அதை அவர் நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியில் அவர் இக்கருத்தினை வெளியிட்டிருந்தால், நான் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் அவர் அறிவார்.
ஏற்கனவே இத்தகைய போலியான கருத்துகள் தொடர்பில் நான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும், அவற்றில் நான் வெற்றிகண்டதும் அவர் அறியாமல் இல்லை. எனவே, அவர் இக்கூற்றினை நிரூபிக்க முன்வர வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri