தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகையை நீடித்து வரும் இந்திய அரசாங்கம்
இந்திய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகையை நீடித்து வருகிறது.
இலங்கையில் உள்ள அரச தொழிநுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலைப் படிப்புகள் மற்றும் தொழிநுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் 6 திறமைச்சித்திகளுடன் கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரத்தில் சித்திபெற்றவர்கள் மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 25 வயதுக்கு குறைவானவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையினை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தற்போது அழைத்துள்ளது.
இணையத்தள பதிவிறக்கம்
இதன் தொடர்பில் விண்ணப்பப்படிவங்களை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இந்திய உயர்ஸ்தானிகரகம், அஞ்சல் பெட்டி எண். 36 - 38, காலி வீதி, கொழும்பு - 03 மற்றும் 47 மஹாமாய மாவத்தை கண்டியில் அமைந்துள்ள இந்தியாவின் உதவி உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
குறித்த விண்ணப்பதாரர்கள் தமது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் அல்லது பெற்றோரின் சமீப சம்பளச் சீட்டு மற்றும் பெற்றோரின் தொழில் தொடர்பான தோட்டக் முகாமையாளரின் சான்றிதழ் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், இந்திய உயர்ஸ்தானிகரகம், 882, கொழும்பு - 03 என்ற முகவரிக்கு 2023, ஏப்ரல் 29ஆம் திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.