இந்தியா, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது! பேராசிரியர் நளின் டி சில்வா குற்றச்சாட்டு
இந்தியா, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
1980 களின் பிற்பகுதியில் இந்தியாவின் உத்தரவின் பேரில் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பதற்கு ஈடாகவே இந்தியா இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தபோது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவது குறித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
கொழும்பில் வலுவான இந்திய இருப்பு குறித்து தமது கவலையை வெளியிட்ட டி சில்வா, இந்திய வெளியுறவு அமைச்சு கொழும்பில் அமைந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபோதும் நடக்காத ஒரு கற்பனையான இனப்படுகொலையை பிரசாரம் செய்வதன் மூலம் கனடாவும், இங்கிலாந்தும் இன அடிப்படையிலான பிளவுகளுக்கு உதவுகின்றன.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈடாக 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கைகளுக்கு இடம்தரக் கூடாது என்றும்பேராசிரியர் நளின் டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.