இலங்கையை காக்க இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும்.! திருமாவளவன் கோரிக்கை
இலங்கையில் வீசிய 'டிட்வா' புயல் காணச் சகிக்காத கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான பேரிடர்காலச் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மனிதாபிமான அடிப்படையில் பேருதவி புரிந்திட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு, தமிழ் மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்கள் மீண்டெழும் வகையில் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும்.
இப்புயல், மழை வெள்ளத்தால் தென்னிலங்கையிலும் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, மலையகப்பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை
மலையகத்தமிழர்களின் வாழ்நிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய 'காலநிலை சார்ந்த இயற்கை பேரழிவாக' இந்த டிட்வா பதிவாகியுள்ளது.
இதுவரை 334 பேர் பலியாகியும், 370 பேர் காணாமல் போயும், 10 இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியும் இருக்கிறார்கள் என்று இலங்கையின் புயல் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ஆனால், இழப்பு இதைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையை 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதன் பின்னர் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை பேரிடராக டிட்வா விளங்குகிறது.
சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்பு கரையோரப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், டிட்வா இலங்கைத் தீவு முழுக்கவும் மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்திய அரசு தொடர்ந்து உதவிகளை வழங்கவேண்டும் எனவும்; பாதிக்கப்பட்ட குக்கிராமங்கள் வரைக்கும் உதவிகள் கிட்டுவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.