ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம்!
தடைசெய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் அபு சயாஃப் அமைப்புகள் இலங்கையில் பயங்கரவாத மையத்தை உருவாக்கக்கூடும் என கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
அத்துடன், இது தென்னிந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அல்கொய்தா, அபு சயாஃப் வலையமைப்பு கிழக்கு வளைகுடா நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்க பிராந்தியங்களில் அதன் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்ய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையை மையமாக கொண்டு ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ம் திகதி இந்தியாவின் கேரள கடற்பரப்பில் வைத்து பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல குற்றச்சாட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மார்ச் மாதத்தில், இந்தியாவிலும் இலங்கையிலும் தொடர்புகளைக் கொண்ட பல போதைப்பொருள் கடத்தல் மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதி குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.