வழங்கிய கடனுக்காக முக்கிய திட்டங்களை குறிவைக்கும் இந்தியா:இறையாண்மைக்கு பாரிய பிரச்சினை என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல
முற்றாக சீர்குலைக்கப்பட்டுள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்து்ளளார்.
கொழும்பு மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்
தேசிய வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கம்
தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தனது இயலாமை மற்றும் வங்குரோத்து நிலைமையை மறைக்க நாட்டின் வளங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து நாட்டை மேலும் பொறியில் சிக்க வைத்து வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த இந்தியாவிடம் இருந்து எமக்கு நிதியுதவி கிடைத்தது. இந்திய பிரதிநிதிகள் இலங்கை வந்து 24 மணி நேரம் முடியும் முன்னர் வழங்கும் உதவிகள் பற்றி கூறினர்.
எனினும் இம்முறை இலங்கைக்கு வந்த இந்திய பிரதிநிதிகள் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினாலும் வழங்க போகும் உதவிகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நிதிச்சபை இது சம்பந்தமான முடிவு ஒன்றை வழங்க வேண்டும் எனக் கூறினர். அத்துடன் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கிய நிதிக்கு பல திட்டங்களை வழங்குமாறு தெரிவித்தனர்.
இலங்கையின் முக்கியமான கேந்திர மையங்களை சொந்தமாக்க முயற்சிக்கும் இந்தியா
சில மின் உற்பத்தி நிலையங்கள், இந்திய - இலங்கை இடையில் மின் கம்பி இணைப்பை ஏற்படுத்துவது போன்ற சில புதிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அத்துடன் மன்னார் வளைக்குடாவில் இரண்டு எரிபொருள் வலயங்களையும் கோரினர். திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் தொழில் அபிவிருத்தி பிரதேசமாக காணிகளை கோரியதே இதில் மிகவும் ஆபத்தான கோரிக்கை.
இந்த காணிகளை வழங்கினால், கட்டாயம் துறைமுகம் அதனுடன் இணைக்கப்படும். இது மிகவும் பயங்கரமான நிலைமை. மன்னார் வளைக்குடாவில் எரிபொருள் அகழ்வுக்கு இரண்டு இடங்களை கோருகின்றனர்.
இந்தியா படிப்படியாக எமது நாட்டின் முக்கியமான கேந்திர மையங்களை தமக்கு சொந்தமாகும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்பது மிக தெளிவானது.
தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க போகின்றனர்.
இது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நிலைமை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.