புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!
தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் லண்டனில் வைத்து இலங்கை புலம்பெயர் தமிழ் சமூகம் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளதனால் புலம் பெயர் சமூகத்தினர் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை வலுவிழந்துள்ளது என இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மெத்தனப் போக்கு சீன ஆதிக்கத்தை இலங்கையில் வலுப்பெறச் செய்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளதுடன் சர்வதேச வளங்களைப் பயன்படுத்தி சீன புத்திஜீவிகளின் வழியாக இலங்கைத் தமிழர்களின் நலன்களை உறுதி செய்யும் முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் வட பகுதியில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்தால் அது தமிழ் சமூகத்தை பாதிக்கும் என புலம்பெயர் தமிழ் சமூகம் கருதுகின்றது எனவும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து வழிகளையும் கையாண்டு சீன அரசாங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்தி இலங்கைத் தமிழர்கள் அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கான முனைப்புக்களை புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.