திருகோணமலை நகரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகர்ப்பகுதியில் அனேகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நகரின் பெரும்பாலான பிரதான வீதிகளில் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
அத்துடன் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொருள் கொள்வனவில் ஈடுபடுவது கோவிட் தொற்றினை மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுவது ஊரடங்கு சந்தர்ப்பத்தில் மக்கள் பொருள் கொள்வனவுக்காக வெளியில் செல்வதற்கு வாய்ப்புள்ளதாகவும். ஊரடங்கு சட்டத்தை மீறும் செயல் என்றும் இதனால் நகரத்தின் பெரும்பாலான வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு தேவையற்ற விதத்தில் வீதிகளைப் பயணிப்பது மற்றும் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை உடன் நிறுத்தி மாவட்டத்திலிருந்து கோவிட் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.