தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விசேட நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் நிலைமை மிக மோசமாக அனுபவித்து தற்போது திருப்திகரமான நிலைக்கு வந்திருக்கிறோம் என்று கூறமுடிகிறது. இதுவரை 23000 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 307 தொற்றாளர்கள் மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதியப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் டெல்டா, அல்பா போன்ற பல வேரியன்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்திருந்தது. தற்போது ஒமிக்ரோன் தொற்று காணப்படுகிறது. இந்தநிலையில் நாம் அடுத்தகட்ட நகர்வுக்குள் நுழைந்து கொண்டு இருக்கின்றோம்.
பொருளாதார, சமுக பிறழ்வுகளிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இருக்கின்றது. இதனால் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து தடுப்பூசிகளைப் பெற்று நிரந்தர தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் கட்ட தடுப்பூசிகள் 97 வீதமானவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் 87 வீதமானவர்களுக்கும் வழங்கியிருக்கின்றோம்.
இது இலங்கையின் முதல் ஜந்து மாவட்டங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது. மூன்றாம்கட்ட தடுப்பூசி வழங்களில் மிகுந்த கீழ் மட்டத்தில் காணப்படுகிறது. அதாவது 25 வீதமானவர்களே பெற்றிருக்கின்றதுடன், இது இலங்கையின் கடைசி 5 மாவட்டங்களில் ஒரு இடத்தை மட்டக்களப்பு மாவட்டம் இடம்பெறுகின்றது.
இதனால் இராணுவத்தினரின் சுகாதாரத் துறையினரும் தற்போது தடுப்பூசி ஏற்றும் களத்தில் இறங்கி உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்த காலத்தில் மழை வீழ்ச்சி ஏற்படும் காலம் இக்காலத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும். கடந்த வருடம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இந்த வருடம் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. இதுவரை ஜனவரி பிப்ரவரி மாதத்திற்குள் 75 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். எதுவிதமான மரணங்களும் டெங்கினால் பதிவுசெய்யப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டம் தற்பொழுது புதுவிதமான ஒரு அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தொழுநோய் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த வருடத்தில் 731 நோயாளர்கள் இலங்கை பூராகவும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதனுள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 110 நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 30 நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவற்றுள் 18 நோயாளிகள் மட்டக்களப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
சுகாதாரத் துறையினர் இதனை ஒரு பாரிய பிரச்சினையாக அடையாளப்படுத்தி இருக்கின்றோம். கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நிறைவுற்றதன் பின்னர் தோல் நோயினை முகாமைத்துவம் செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் அதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.
தொழுநோயின் சிகிச்சை சம்பந்தப்பட்ட விடயத்தில் இலங்கையில் காணப்படுகின்ற தொழுநோய் வைத்தியசாலையில் ஒன்றாக மாந்தீவு வைத்தியசாலை காணப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் தொழு நோயாளர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கும் முறையே காணப்படுகின்றது.
அதாவது தனிமைப்படுத்திப் பராமரிப்பின்றி என்ற விடயம் ஒரு காலத்தில் காணப்பட்டாலும் தற்போது காணப்படுவதில்லை. ஆகவே அதனை நாங்கள் வைத்தியசாலையை மீண்டும் புனரமைத்துக் கொண்டு செல்லும் திட்டம் இப்போது இல்லை.
தொழுநோயாளர்கள் அந்த வைத்தியசாலையில் காணப்பட்டதன் மூலம்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் பலரிடம் காணப்படுகின்றது.
ஆகவே எதிர்காலத்தில் நாங்கள் இதனைக் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்து சில ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம்.
மேலும் மூன்றாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தக்கூடிய நிலையும் உள்ளது. அதனைத் தவிர்த்துக்கொள்ள அனைவரையும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும். தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரிசைகளில் நின்று மூன்றாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கிராமங்களில் மூன்றாவது தடுப்பூசிகளைப்பெற்றுக் கொள்ளாதவர்கள் மற்றும் முதலாம் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன'' இவ்வாறு கூறியுள்ளார்.






