அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகரித்த ஆபத்து : உலக அளவில் புதிய உச்சம்
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு இருக்கிறது.
அங்கு நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மத்தியில் அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் அதன் பின் மெல்ல மெல்ல கோவிட் பரவல் அதிகரிக்க தொடங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் புதிய வகை உருமாறிய கோவிட் தொற்றான ஒமிக்ரோன் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கோவிட் பாதிப்பு உயரத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு திடீரென்று லட்சக்கணக்காக அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றுக்குள்ளானார்கள்.
கோவிட் பரிசோதனை இந்த நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு இருக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேர் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் சில மாகாணங்களில் இன்னும் கோவிட் பாதிப்பு குறித்து அறிக்கை முழுமையாக வரவில்லை என்றும் அந்த அறிக்கைகள் வந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தகவலில் நேற்று ஒரே நாளில் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அமெரிக்காவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவது கவலை அடைய செய்துள்ளது.
கடந்த 3 வாரங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.