மாற்றுத்திறனாளிகளான மாணவர்களை கல்வியில் உள்ளீர்ப்புச் செய்தல் தொடர்பான கருத்தாய்வு
திருகோணமலை உப்புவெளியில் விசேட தேவையுடைய மாணவர்கள் உள்ளீர்ப்பு கல்வி அபிவிருத்தி தொடர்பான கருத்தாய்வு இடம்பெற்றுள்ளது.
இந்த கருத்தாய்வை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் மற்றும் உள்ளீர்ப்பு கல்வி அபிவிருத்திக்கான போரம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
கிண்ணியா கல்வி வலயம்
இதன்போது திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களில் மிகவும் குறைந்த செயற்திறனுடையது என அடையாளம் காணப்பட்ட கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளினதும் அங்கு கற்கின்ற மாணவர்களினதும் அடைவுமட்டம் மற்றும் செயற்திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவத்தினால் வரையப்பட்டு, முஸ்லிம் எய்ட் யூகே நிதியாதாரம் வழங்கப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமூக பங்கேற்பினை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டமாதிரியானது விசேட தேவையுடைய சிறார்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கவனத்தைக் குவித்திருந்தது.
இக்கருத்திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக விசேட தேவையுடைய சிறார்களை கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளில் உள்ளீர்ப்புச் செய்தல் தொடர்பான பெறுபேறுகளை கல்விக் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான அரசாங்கத் தரப்பினரிடம் எடுத்துச் செல்வது என்பது இக் கருத்தாய்வில் குறிக்கோளாக அமைகின்றது.
உடன்பாடு எட்டப்பட்ட விடயங்கள்
அந்தவகையில், இக் கருத்தாய்வின் முடிவில் பங்கேற்றவர்களினால் உடன்பாடு எட்டப்பட்ட விடயங்களாக,
1. சர்வதேச நியமமான அனைவருக்கும் கல்வி என்ற கருத்தாக்கத்தை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டவர்களாக,
2. வேகமாக மாறிவருகின்ற இன்றைய உலகின் பல்வேறு சவால்களுக்கு பொதுவில் இளம் தலைமுறையினரும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகளாக அடையாளங் காணப்பட்ட மாணவ சமூகமும் தம்மைத் தகவமைத்துக கொள்வதற்கு அவசியமான வாய்ப்புகள், வளங்கள், வழிகாட்டல்கள் வினைத்திறனுடன் வழங்கப்படல் வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக,
3. அனைவரும் கல்வி வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனின், அரசாங்கம், சுயாதீனமான மனித நேய அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகிய மூன்று பிரிவினரும் இணைந்து பரஸ்பரம் ஒத்துழைப்புடனும் பங்காளித்துவ முறைமையின் கீழ் செயற்படுவது மேற்படி இலக்கினை அடைவதை துரிதப்படுத்தும் என்பதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்வர்களாக,
4. நடப்பிலுள்ள அரசாங்கத்தின் கல்விக் கொள்கை மற்றும் வழிகாட்டல்களுக்கு உட்பட்டு செயற்படுவதுடன், மேற்படி கல்விக் கொள்கைகளுக்கு நடைமுறையில் வலுவூட்டல் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்டவர்களாக, அரசாங்க மற்றும் சிவில் சமூக முயற்சிகளினால் அடையாளங் காணப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் மற்றும் இடைவெளிகளை இக் கருத்தாய்வில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவதென உடன்பாடு எட்டப்பட்டது.
இக்கருத்தாய்வின் மூலம் அடையப்பெற்ற தெளிவுகள் சமூக மயப்படுத்தப்படல் வேண்டும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், அரச அதிபரின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை மற்றும் சமூக சேவைகள் துறை அதிதிகளுடன் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri
