மன்னார் விடத்தல் தீவு கடற்கரையில் பொருட்கள் எரியூட்டப்பட்ட விவகாரம் : பொலிஸார் தீவிர விசாரணை
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு மற்றும்,வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை கடலில் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடத்தல் தீவு மேற்கு கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் பொருளாளர் கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்று வந்த பின்னர் மீண்டும் படகை விடத்தல் தீவு கடற்கரையில் கட்டியுள்ளார்.
விடத்தல் தீவு கடற்கரையில்
குறித்த படகில் பெறுமதியான வெளி இணைப்பு இயந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது.
எனினும், மறு நாள் நேற்றைய தினம் (19) காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல குறித்த படகின் உரிமையாளர் கடற்கரைக்குச் சென்ற போது படகை காணவில்லை.
விசாரணை முன்னெடுப்பு
இதன் போது குறித்த படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை சற்று தொலைவில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அடம்பன் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பின்னர் தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று எரியூட்டப்பட்ட படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு,விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது விடத்தல் தீவு கடற்றொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







