நள்ளிரவில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை! எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச பொதுமக்கள் (Photos)
திருக்கோவில் பிரதேச சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் நேற்று நள்ளிரவில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் இப்பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டதுடன், இப்பிரதேச மக்கள் இச்செயற்பாட்டை கண்டித்து இன்று எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பொத்துவில், கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும், சங்கமன்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல பிக்குகள் சிலரும் இங்கு காணப்பட்டனர்.
இதனையறிந்த இப்பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5 மணி முதல் இங்கு ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் இச்செயற்பாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
குறித்த சிலை அகற்றப்படும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் சூளுரைத்திருந்ததுடன், சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.





