கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசுக்கு உள்ளீர்க்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் உள்ளீர்க்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகச் சுகாதார அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிண்ணியா தள வைத்தியசாலை தற்போது கிழக்கு மாகாண சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளது. இவ்வைத்தியசாலையைக் கிண்ணியா பிரதேச மக்கள் மட்டுமன்றி தம்பலகமம், சீனக்குடா மற்றும் மூதூரின் இறால் குழி கிராம மக்களுமாக சுமார் 125,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக சீனக்குடா பொலிஸ் மற்றும் விமானப் படையினருக்கும், இப்பகுதியிலுள்ள ஏனைய படையினருக்கும் இவ்வைத்தியசாலை பயன்படுகின்றது.
இந்த மக்களினதும், படையினரதும் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் அளவுக்கு இந்த வைத்தியசாலையில் உள்ள வளங்கள் போதுமானதாக இல்லை. இந்தத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்து கொடுக்கும் வாய்ப்பும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இல்லை.
இதனால் கடந்த காலங்களில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மூலமே இவ்வைத்தியசாலையின் சில தேவைகள் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வைத்தியசாலையில் பல்வேறு பற்றாக்குறைகள் இருப்பதால் அரசின் இலவச சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் இம்மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய
அரசின் கீழ் உள்ளீர்க்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என
அவ்வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
